இங்கிலாந்தில் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியது!
இங்கிலாந்தில் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இங்கிலாந்தில் உள்ள அனைத்து கடைகள், போக்குவரத்து மையங்கள், வங்கிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும்.
இதிலிருந்து 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு கடைகளில் முகக்கவசம் அணியத் தவறியவர்களுக்கு 100 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆனால், சில சில்லறை விற்பனையாளர்கள் இந்த விதியை அமுல்படுத்த மாட்டார்கள் என்று வலியுறுத்தியுள்ளனர்.
முகக்கவசம் அணியாமல் கடைக்கு வரும் எவரையும் உள்ளே அனுமதிக்க கடைக்காரர் மறுப்பு தெரிவிக்கலாம் என்றும், முகக்கவசம் அணிய மக்கள் மறுக்கிறார்கள் என்றால் பொலிஸாரை அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளன.
ஜூலை 27ஆம் திகதி முதல் வேல்ஸ் அரசாங்கமும் இதே நடவடிக்கையை அமுல்படுத்த உள்ளது.