Main Menu

ஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே?

உச்சகட்ட இன அழிப்புப்போர் நடந்து முடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதியின் கண்கள் திறக்குமா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் எண்ணற்ற ஈழ மக்கள்.
.
அதிலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில்
முன்னர் ஈழப்புரட்சி அமைப்பின் தலைவராகவும் (ஈரோஸ்)….

பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளது
முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் மாபெரும் பங்காற்றிய க.வே.பாலகுமார் கதி என்னவாயிற்று?
.
அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விகளுக்கான பதில் இன்னும் கிடைத்தபாடில்லை.
.
எளிமை என்றால் அதற்கு இன்னொரு பெயர் உண்டு.

அதுதான் க.வே.பாலகுமார்.
.
ஆர்ப்பரிக்காத அரசியல்…..

எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பெருந்தன்மை….

இந்தியப் பிரதமரையே முதல் நாள் சந்தித்துவிட்டு வந்தாலும் மறுநாள் ஒரு ஓட்டை சைக்கிளில் கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றிவரும் எளிமை…..

இதுதான் தோழர் பாலா.
.
எனக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பு ஏற்பட்டு ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது என்பதெல்லாம் பிற்பாடு ஆறுதலாகக் கதைக்க வேண்டிய சமாச்சாரங்கள்.
.
ஆனால்….

மிகச் சரியாக எட்டு வருடங்கள் முன்பு தனது மகன் சூரியதீபனுடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அவர் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாயின.
.
அவர் எங்கு கொண்டுசெல்லப்பட்டார்?
எந்த முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
.
சிங்கள அரசின் புனர்வாழ்வு அமைச்சரோ அவர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டார் என்று அடித்துச் சத்தியம் செய்தார்.
.
ஆனால் ஒரு புகைப்பட ஆதாரத்தினை வெளியிட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் பிரிட்டிஷ்
பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஹாரிசன்.
.
அந்தப் படம்தான் பாலகுமார் தனது மகனுடன் ராணுவம் சுற்றியிருக்க கையில் கட்டுடன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படம்.
.
அவரோடு யோகி, கவிஞர் புதுவை ரத்தினதுரை ஆகியோர் சரணடைந்திருந்தாலும் ஆதாரம் சிக்கியிருப்பது இவர் ஒருவருடையதுதான். பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் படத்தோடு எண்ணற்ற கேள்விகள் எழுப்பினாலும் வாய் திறக்காமல் மெளனம் சாதிக்கிறது இலங்கை அரசு.
.
அதைவிட அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பஷீர் சேக்தாவூத் தனது அரசியல் ஆசான் பாலகுமாரையும் அவரது மகனையும் கண்டுபிடித்து தருமாறும் இதில் தனிப்பட்ட கவனத்தை செலுத்துப்படியும் இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மிக அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
.
நம்முன் உள்ள ஏக்கமெல்லாம் மண்ணை மீட்க தம்மைத் தொலைத்துக் கொண்ட பாலகுமாரும் சரணடைந்த மற்ற போராளிகளும் எப்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள்? என்பதுதான்.
.
உலகத்தின் மனசாட்சி தன் மெளனத்தைக் கலைக்குமா?

பகிரவும்...