Main Menu

அணையா விளக்கு அன்னை பூபதித்தாய் – 32வது ஆண்டு நினைவு தினம்

அணையா விளக்கு அன்னை பூபதித்தாயின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளிலும் இந்தியப்படைகள் முகாம்கள் அமைத்துத் தங்கியிருந்துகொண்டு சொல்லமுடியாத கொடுமைகளைச் செய்தன.தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாகப்புகுந்து வெறித்தாண்டவம் ஆடினார்கள்.உடைமைகள் சூறையாடப்பட்டன. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சந்தேகத்திற்குரிய இளைஞர்கள் உடனடியாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர்.எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இராணுவத்தினர் பெண்களிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டனர்.பெண்கள் வெளியில் நடமாடவே அஞ்சினர்.

மட்டக்களப்பு வெள்ளைப்பாலத்தில் நடந்துபோய்ககொண்டிருந்த இரு இளம்பெண்களை இந்திய இராணுவச் சிப்பாய்கள் விரட்டிப்பிடித்து அருகில் இருந்த கடைக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார்கள்.இச்செய்தி நகரமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.இத்தகைய கொடுமைகளை இனியும் பொறுத்திருக்கமுடியாதென தாய்மார்கள் கொதித்தெழுந்தனர்.

தியாகி திலீபன் காட்டிய வழியில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதென அன்னையர் முன்னணி முடிவு செய்தது.

1-இந்தியப்படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும்.
2-விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து மாமாங்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக குருந்தமர நிழலில் அன்னையர் முன்னணியின் உண்ணாநோன்புப் போராட்டம்
தொடங்கப்பட்டது.தொடக்கத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் இதை அலட்சியப்படுத்தினர்.ஆனால் உண்ணாநோன்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு நகரில் மட்டுமன்று மாவட்டம் முழுவதிலும் உள்ள பெண்களும் மாணவிகளும் ஆர்த்தெழுந்ததைப் பார்த்தவுடன் அவர்கள் திகைத்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தைப் பார்க்கவும் ஆதரவு தரவும் மக்கள் அணி அணியாக அங்கு வரத் தொடங்கினார்கள். இப்போராட்டத்தை திசைதிருப்பவும் மக்களை மிரட்டவும் இரகசியத்திட்டம் ஒன்றை இந்திய இராணுவம் சிங்களக் காவல்துறையுடன் சேர்ந்து வகுத்தது..

மட்டக்களப்பு மாநகரச்சந்தை மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்த வேளையில் சிங்களக் காவல்துறை திடீரெனச் சந்தையைச் சுற்றிவளைத்து கண்மூடித்தனமாக மக்களைத் தாக்கியது.
ஏராளமான மக்கள் குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் ஆகியோர் பலத்த காயங்களுக்கு ஆளானார்கள். குருதி கொட்டியது. அப்பொழுதும் சிங்கள வெறியர்களினது ஆத்திரம் அடங்கவில்லை.
கலைந்தோடிய மக்கள்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டார்கள். சந்தையெங்கும் பிணக்குவியலும் மக்களின் ஓலமுமாகக் காட்சிதந்தது.இவ்வளவு கொடுமையையும் இந்திய இராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இதுவும் மக்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியிருந்தது.

அன்னையர் முன்னணி தங்கள் உண்ணாநோன்பு போராட்டத்தை தொடர் உண்ணாநோன்புப் போராட்டமாக மாற்றித் தீவிரப்படுத்தியது. நாள்தோறும் ஏராளமான பெண்களும், மாணவிகளும் போராட்டத்தில் புதிய உத்வேகத்துடன் குதித்தனர். இது ஒரு மக்கள் போராட்டமாக வெடித்தது கண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அதிர்ச்சியடைந்தார்.

“இந்திய அமைதிப்படை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை
விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே போராடுகிறது” என வானொலிமூலம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அவருடைய அறியாமையைக் காட்டியது. மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறல்ல. மக்களிலிருந்தே புலிகள் தோன்றி மக்களைக்காக்கப் போராடுகிறார்கள் என்ற உண்மையை அவர் உணரவில்லை.எனவே அவருடைய அறிவிப்பால் அன்னையர்கள் மனம் மாறிவிடவில்லை.

1988 ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாளன்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி அன்னையர் முன்னணியை இந்திய இராணுவத்தினர் அழைத்தனர். அதனை ஏற்று அன்னையர்கள் திருகோணமலைக்குச் சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

பிரிகேடியர் சண்டேஸ் என்னும் உயர் அதிகாரி இந்திய அரசு சார்பில் கலந்துகொண்டு “புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும். அதற்குப்பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும்”என்று கூறினார்.

“எங்கள் நகைகளைக்கொடுத்து எங்களைக்காக்க எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்?”என்ற சூடான வினா அன்னையரிடமிருந்து கிளம்பியது.

பிரிகேடியர் சண்டேஸ் வாயடைத்துப் போனார். பேச்சுவார்த்தை முறிந்தது. உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.

அன்னையர் முன்னணியினர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர்.பெப்ரவரி 10 ஆம் நாளன்று கொழும்பில் இந்தியத் தூதுவர் டிக்சிற் அன்னையர் முன்னணியினர்களுடன் பேசினார். ஆயுதங்களைக்கொடுக்க வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடினார். அவருடைய மிரட்டலுக்கு அன்னையர் அஞ்சவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை முறிந்தது.

ஆத்திரமடைந்த இந்திய இராணுவம் மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தைச் சுற்றி வளைத்தது. அப்பகுதியில் இராணுவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டது. பெப்ரவரி 12,13,14 ஆகிய மூன்று நாட்களும் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. யாரும் வெளியில் நடமாடக்கூடாது. நடமாடுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டது.
உண்ணாநோன்பிருக்கும் பெண்களை உடனே எழுந்து செல்லும்படி இராணுவம் மிரட்டியது. ஆனால் யாரும் எழவில்லை. மேலும்மேலும் பெண்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அவர்களின் மன உறுதியைக்கண்டு அஞ்சிய இந்திய இராணுவம் பணிந்து. வேறுவழியின்றி ஊரடங்குச்சட்டத்தை விலக்கிக்கொண்டது.

ஆனாலும் இந்திய இராணுவ அதிகாரிகளின் ஆத்திரம் தணியவில்லை. அன்னையர் முன்னணியின் ஆலோசகரான கிங்ஸ்லி இராசநாயகத்தின் வீட்டைச் சுற்றிவளைத்து அவரைக் கடுமையாகத் தாக்கி முகாமுக்கு கொண்டுசென்றனர்.
அன்னையர் முன்னணிக்கு எதிரான இராணுவ அழுத்தங்கள் நாளுக்குநாள் அதிகரித்தன.அன்னையர்களும் பதிலடி கொடுக்கத் திட்டமிட்டார்கள்.
அடுத்தகட்டப் போராட்டமாக சாகும்வரை உண்ணாநோன்பு இருப்பதென முடிவுசெய்தார்கள்.
“நான்தான் முதலில் உண்ணாநோன்பு இருப்பேன்”அன்னை பூபதி கணபதிப்பிள்ளை.
தன்னுடைய பிள்ளைகளுள் இருவரைச் சிங்களப் படையினரின் இரத்தப்பசிக்கு பலிகொடுத்த அன்னையான அவர் தனக்கே முன்னுரிமை உண்டு என வாதிட்டார்.
இல்லை! இல்லை! எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள் எனப்போராடினார் அன்னம்மா டேவிட் அவர்கள்.
இணைபிரியாத தோழிகளாக இருந்து அன்னையர் முன்னணியை வழிநடத்திய அந்த இரு தாய்மார்களும் தாயகத்திற்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னதமான வேள்வியில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இருவரும் போட்டிபோட்டனர். வேறுவழியில்லாமல் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டது. அன்னம்மா டேவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ம் நாள் மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்பாக அன்னம்மா டேவிட் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
சைவக்கோயில் முற்றத்தில் கிறிஸ்தவத்தாய் உண்ணாநோன்பிருந்த காட்சி மதங்கள் வேறாயினும் அனைவரும் தமிழரே என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.

அன்னம்மாவிற்கு ஆதரவாகத் தமிழீழமெங்கும் மக்கள் அனுதாப உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களிலும் ஈடுபட்டனர். கிராமம் கிராமமாக இந்த அலை பரவியது. வழக்கம்போல இராணுவம் மிரட்டியது. அன்னம்மா சாகநேர்ந்தால் அன்னையர் முன்னணிமீது கொலைவழக்குப் போடப்போவதாக எச்சரித்தது. எதுவும் பலிக்கவில்லை.

கடைசியாக சூதுத்திட்டமொன்று வகுக்கப்பட்டது. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைதுசெய்து மிரட்டியும், ஆசைவார்த்தை காட்டியும் ஒரு கடித்த்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. அன்னம்மாவைப் பலவந்தமாக உண்ணாநோன்பில் ஈடுபடுத்தி அரசியல் ஆதாயம்தேட முயற்சி நடப்பதாகவும் எனவே அவரைக் காப்பாற்றி மீட்டுக்கொடுக்கும்படி இந்திய இராணுவ அதிகாரியிடம் அக்கடிதம் முறையிட்டது.
இப்பொய்யான கடிதத்தை ஆதாரமாகக் காட்டி இந்திய இராணுவம் அன்னம்மாவைத் தூக்கிச்சென்றது. இந்த நயவஞ்சக நாடகத்தின் விளைவாக அன்னையர் முன்னணிமீது பூசப்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைத்தெறியச் சபதம் செய்து களத்தில் இறங்கினார் அன்னை பூபதி. அதேவேளை அன்னம்மாவிற்கு நேர்ந்ததைப்போல தனக்கும் நேர்ந்துவிடக்கூடாதென்பதற்காக ஒரு கடிதத்தை தானே எழுதிக்கொடுத்தார்.

“நான் எனது சுயவிருப்பத்தின் பேரிலேயே எனது கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாநோன்பு இருக்கிறேன்.நான் நினைவிழந்துபோகும் நிலை ஏற்பட்டாலும் என்னுடைய கணவரோ அல்லது பிள்ளைகளோ உறவினர்களோ என்னைக் காப்பாற்றவோ தூக்கிச்செல்லவோ அனுமதிக்கக்கூடாது.”என மரண சாசனம் எழுதி அன்னையர் முன்னணியிடம் ஒப்படைத்துவிட்டுச் சாவை நோக்கி பயணத்தை அன்னை பூபதித் தாய் தொடங்கினார்.

“அன்னையர் முன்னணியின் ஆவேச நெருப்பை அணைத்துவிட்டோம்.மக்களின் எழுச்சியை மழுங்கடித்து விட்டோம்”
எனக்கொக்கரித்த இந்திய இராணுவத்தின் ஆணவத்திற்கு அன்னைபூபதி மீண்டும் போராட்டத்தை தொடங்கி முகத்திலறைந்தார்.
18/03/88 அன்று அன்னை பூபதி இருகரங்களையும் கூப்பியபடி மாமாங்கவீதியை வலம்வந்தபோது அலைகடலென மக்கள் திரண்டு இந்தியப்படைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
அன்னை பூபதி மூட்டிய தீ தமிழீழமெங்கும் பற்றியெரியத் தொடங்கியது.
-இந்தியப்படையே திரும்பிப்போ
-அன்னை பூபதியைச் சாகடிக்காதே.
-புலிகளுடன் பேசு.
-தமிழீழத்தைச் சுடுகாட்டாக்காதே.
என்ற முழக்கங்களை வான் அதிர முழங்கிய வண்ணம் மாணவ-மாணவியர்கள் கொளுத்தும் வெயிலையும்,கொளுத்தும் சாலையையும் பொருட்படுத்தாது அலையலையாக அன்னை பூபதியைப் பார்க்க வந்துகொண்டிருந்தனர்.

அன்னைபூபதியின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தமிழீழமெங்கும் போராட்டங்கள் வெடித்தது.
அனலைவாரி இறைக்கும் எரிமலையின் வாயை எப்படி மூடுவது என்பது புரியாமல் இந்திய இராணுவம் திகைத்தது,திணறியது, திண்டாடியது.

ஆரையம்பதியில் இருந்து புறப்பட்டுவந்த அன்னையர் முன்னணி ஊர்வலத்தின்மீது இந்திய இராணுவம் பாய்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கியது.ஏராளமான தாய்மார்கள் படுகாயமடைந்தனர்.

இராணுவ வன்முறைகளைக் கண்டித்து மட்டக்களப்பு நகரில் வணிக நிறுவனங்கள்,பாடசாலைகள் யாவும் மூடப்பட்டன. முழு அளவிலான கடையடைப்பு நடைபெற்றது. நிலைமை விபரீதமாகப் போய்ககொண்டிருப்பதைப் பார்த்த இராணுவ அதிகாரிகள் மீண்டும் ஒரு சதித்திட்டம் வகுத்தனர்.
உண்ணாநோன்புப் பந்தலில் ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியிருந்து சர்வமத பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அன்னை பூபதி மயங்கிய நிலையில் கிடந்தார். காண்போரின் உள்ளங்கள் உருகின.

இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் ஓட்டமும் நடையுமாக உண்ணாநோன்புப் பந்தலுக்கு வந்தார்.அங்கிருந்த முக்கியமானவர்களிடம் இரகசியமாக “மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அன்னை பூபதி அம்மாவைத் தூக்கிப்போவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது” என்று கூறினார்.
இதன்மூலம் கூடியிருக்கும் கூட்டத்தினரிடையே குழப்பத்தையும்,பீதியையும் பரப்பத் திட்டமிட்டே இவ்வாறு கூறினார் என்பதைப் புரிந்துகொண்ட தாய்மார்கள் அன்னை பூபதியைச் சுற்றி வியூகம் அமைத்தார்கள்.
“எங்கள் பிணத்தின்மீது ஏறிக்கடந்துதான் பூபதியைத் தொடமுடியும்”என முழங்கினார்கள்.
திடீரென தொலைவில் துப்பாக்கி வெடிக்கும் ஒலி கேட்கிறது.உடனே கூட்டத்தைச் சுற்றிலும் நிற்கும் இராணுவம் வானைநோக்கிச் சுடுகிறார்கள்.மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கலைந்தோடச் செய்யவே இவ்வாறு செய்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள்.

“உன் துப்பாக்கி மிரட்டல்களுக்கெல்லாம் இந்தப்பூபதி அசைமாட்டாள்”என்கிறார் அன்னை பூபதி. களைத்துப்போன அந்த முகத்தில் உறுதியும் தீரமும் பளிச்சிடுகின்றன.
உடல் களைத்ததே தவிர உள்ளம் களைக்கவில்லை.
உலகப் பத்திரிகையாளர்கள் மட்டக்களப்பில் குவிகிறார்கள். அன்னை பூபதியின் உண்ணாவிரதம் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் எழுச்சியை நேரில் கண்டு உலகமெங்கும் செய்தியைப் பரப்புகிறார்கள்.
அன்னை பூபதியைச் சோதித்த மருத்துவர்கள் அவர் அபாயகட்டத்தை அடைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். மக்கள் பரபரப்பையும் துயரத்தையும் அடைகிறார்கள்.ஆனால் ஆணவம்கொண்ட இந்திய அதிகாரிகளோ மேலும் மேலும் அடக்குமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.
இப்போராட்டத்தை தூண்டிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி அகில இலங்கை தமிழாசிரியர் சங்கத் தலைவர் வணசிங்கா,வணபிதா சந்திரா பெர்னாண்டோ ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த கிங்ஸ்லி இராசநாயகம்,பூபதி அன்னையின் பிள்ளைகள் எனப் பலர் கைதுசெய்யப்படுகிறார்கள்.

அன்னையின் கணவர் கணபதிப்பிள்ளையை இந்திய இராணுவ அதிகாரிகள் அழைத்துச்சென்று நயமாகவும், பயமாகவும் திரட்டினார்கள்.ஆனால் அவரோ “தமிழ் மக்களுக்கு நியாயம் தேடித்தான் என் மனைவி தன் உயிரைத் தியாகம் செய்ய உறுதிபூண்டிருக்கிறாள்” எனக்கூறுகிறார்.

அதிகாரிகளின் அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. வெறிகொண்ட வேட்டை நாய்களைப்போல இந்திய இராணுவம் மட்டக்களப்பு வீதிகளில் அலைகிறது. 18/03/88 அன்று தனது தியாகப் பயணத்தை தொடங்கிய அன்னை பூபதி சரியாக 31ஆம் நாள் தனது உயிரைத் தியாகம்செய்து சாவைத் தழுவிக்கொள்கிறார்.
தமிழீழமெங்கும் சோகவெள்ளத்தில் ஆழ்கின்றது.அன்னை பூபதியை இறுதியாக காண்பதற்கு மக்கள் திரளுகின்றனர்.

இந்திய இராணுவமோ மனிதாபிமானமற்ற முறையில் வெறிகொண்டு மக்களை விரட்டியடிக்கிறது. ஆனாலும் மக்கள் அலை அலையாக மாமாங்கத் திடலில் குவிகின்றனர். எப்படியும் அன்னை பூபதியின் இறுதி ஊர்வலத்தை நடைபெறவிடக்கூடாது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு அவருடைய உடலைத் தூக்கிச்சென்று எரித்துவிட இந்திய இராணுவம் முயலுகின்றது. தாய்மார்கள் திரண்டுநின்று அன்னையின் உடலைப் பாதுகாக்கின்றனர். மற்றொருபக்கம் சிங்கள இராணுவமும் அன்னைபூபதியின் உடலை கைப்பற்றிச்செல்ல முயன்றது.
அன்னையர்கள் தங்கள் தலைவியின் உடலை மறைத்துவைக்கிறார்கள்.இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடைபெறுகின்றன.
இரவோடு இரவாக எல்லா ஏற்பாடுகளும் நடந்து அன்னை பூபதியின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப்பட்டது.ஊர்வலம் புறப்பட்டுவிட்ட செய்தி கணநேரத்தில் பரவி மக்கள் வெள்ளம்போலத் திரளுகிறார்கள்.
நாவலடிக்கடற்கரை இதுவரை காணாத காட்சியைக்கண்டது. ஒருபுறம் அலைகடல் மறுபுறம் மக்கள்கடல் இடையே அன்னை பூபதியின் திருவுடல்.
அன்னைபூபதி உயிரோடு இருக்கும்போதும் அவரின் உறுதியைக் குலைக்க இந்திய-சிங்களக் கூட்டு இராணுவத்தால் முடியவில்லை. அவர் இறந்த பிறகும் அவர் உடல் அருகேகூட நெருங்க முடியவில்லை.
அன்னை பூபதியின் உடையற்ற தீரமும் ஒப்பற்ற தியாகமும் தமிழீழப் பெண்களுக்கு என்றென்றும் வழிகாட்டிக்கொண்டே இருக்கும். தமிழீழப் பெண்களின் எழுச்சி வடிவமாகவும். தமிழர் வரலாற்றில் ஒரு கலங்கரை விளக்காகவும் அன்னை பூபதித்தாய் என்றும் திகழ்வார்.

இணைய பதிவு…..

பகிரவும்...