Main Menu

எங்கள் இனம் சுதந்திரமாக வாழ தங்களையே விதைத்த கரும்புலிகளின் நினைவு நாள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த கரும்புலி வீரர்களுக்கு  வீரவணக்கங்கள் !!!

“நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;”

நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை, எமனுக்கும் அஞ்சுவதில்லை..! என்ற இலக்கணத்துக்கான உருவம் தான் கரும்புலிகள்.!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடை நீக்கிகளாக தம்மையே உயிராயுதமாக்கி தம் இனத்திற்காக உடலோடு வெடிசுமந்து எதிரியின் பலத்தை தகர்த்தெறிந்த இரும்பு மனிதர்கள்.

மண்மீதும், தன் மக்கள் மீதும் கொண்ட அளவற்ற நேசிப்பால் முகம் மறைத்து, முகவரி மறைத்து எத்தனையோ பெரும் தாக்குதல்களை நடாத்தி சாதனைபடைத்த அற்புதங்களை நினைவுகொள்ளும் நாள் புனிதமானது.

யாழ்- வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரமரணமடைந்த கப்டன் மில்லர் என்ற போராளியே, விடுதலை போராட்டத்தின் பேரோளி..! முதலாவது கரும்புலி..! இன்றோடு முப்பது ஆண்டுகளை கடந்து நிற்கிறோம். மாவீரர் கனவுகளை நெஞ்சில் கனலாக்கி அவர்களின் இலட்சிய பாதையில் இரண்டறக் கலந்து நிற்கிறோம்..!

இமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா மாணிக்கக் கற்களாய் ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்களை நினைத்து தலைசாய்த்து வணங்கி பணிசெய்வோம் என இன் நாளில் உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

எமது போராட்டம் நியாயமானதாகவோ அல்லது சத்தியத்தின் வழி நிற்பதினாலோ இந்த உலகம் எமக்கு சாதமாக நிற்கப்போவதில்லை. நாம் பலம் பொருந்தியவர்களாகவும் தகுதியுள்ளவர்களாகவும் எம்மை மாற்றிக் கொள்வதனாலேயே இந்த உலகம் எமக்கான நீதியைப் பேசும். அதற்கு ஏற்றவகையில் உலகத் தமிழ் இளையோர் அமைப்புக்கள் ஒரு பலம் வாய்ந்த அமைப்புகளாகச் செயற்பட்டு ஒரு உயரிய நோக்கத்துடன் தாம் வாழும் நாடுகளில் கிடைக்கக்கூடிய அறிவியல், பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி தம்மைப் பலப்படுத்தி எம்மினத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

எம்தியாகமும் உறுதியும் தான் எமது போராட்டத்தை வளர்த்தது. உலகிற்கு பறைசாற்றியது. அதே உறுதியுடன் தொடர்ந்து செல்வோம். வரலாறு எமக்காக மீண்டும் வரும்.

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

***************************************************************************

இன்று கரும்புலிகள் நாள் , தகர்க்க முடியாத எதிரியின் இரும்புக் கோட்டைகளைத் தமதுயிரை ஆயுதமாக்கித் தகர்த்து எறிந்த வீர மறவர்களின் நாள். 1987 ஜீலை ஐந்தாம் நாள் நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இருந்த இராணுவக் காம்ப் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்றக் இனால் மோதியதன் மூலம் புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.

அந்த இமாலய சாதனையைச் செய்தவன் துன்னாலையைச் சேர்ந்த வல்லிபுரம் வசந்தன் எனப்படும் கப்டன் மில்லர் ஆவார். வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியினரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டார் மில்லர். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் இராணுவத்தினர் வடமராட்சிப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தார்.

பிரபாவும், ( பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன் ) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்றுக் கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும்  அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.

திட்டம் உருவானது. இரவு நெல்லியடி இராணுவ முகாமிற்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனென்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும்.

வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுப்பெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும்.

சரியான நேரம் நெருங்கியதும் எம் சகாக்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்.

தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தார். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தார். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை.

கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவரிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தார். அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.

கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர். பொறுப்பாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.

மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினார். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காகக் காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தார். முகாமை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன.

தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்துக் கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் தூக்கி எறியப்பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவலரணில் இருந்து இராணுவத்தினரின் machine guns வெடிக்கத் தொடங்கின.

கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். ” தடைகள் அகற்றப்பட்டு விட்டன ” ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில் இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது சற்றுப்பொறு. மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாகக் கேட்டது.

அதைக் கேட்ட மில்லர், பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன் என்றான். மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப்பட்டதும் நீ போகலாம்.

பிரபா, முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினார்.

கமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் மூட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுப்பாளரிடமிருந்து மில்லரைப் புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.

மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான். வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான். பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது.

மில்லர் வண்டியை மெதுவாக ஓடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்து ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து “மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு” மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது.

வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து ஏனையோர் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.

மற்றவர்கள் மீண்டும் முகாமை நோக்கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த, சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள்.

மில்லரின் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகளோடு சங்கமாகித் தன் பணியை செவ்வனே முடித்திருந்தார் .

https://www.youtube.com/watch?time_continue=10&v=Jdz1ZKqdQWM

பகிரவும்...