Main Menu

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள்

“தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.”

– சு. ப. தமிழ்ச்செல்வன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

irr1

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

Irruppu (18)

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும்
முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்

ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.

 

“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.
அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்

Irruppu (13)

தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு : தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03-11-2007.

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.

நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

வே. பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Irruppu 25

 

 

 

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்…

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு.

சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்குரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் உரையாற்றுகிறார், அவரது உரையில் தமிழன் சார்ந்த பெருமிதம், தமிழினம் சுதந்திரம் பெறத்தகுதியான இனமாக, வீரமுள்ள இனமாக வளர்ந்துவிட்டது என்ற நிம்மதி.  எல்லோரும் மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் கலந்திருந்தோம்.

உணவுக்காகக் காத்திருந்த வேளையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உணவுண்ண தாமதிப்பது நல்லதல்ல என தலைவர் சங்கடப்பட்டு அவசரப்படுகிறார். தனக்கென தனியாக அவசரமாகத் தருவிக்கப்பட்ட உணவைப் புறக்கணித்து, “எமது வான்புலிகளைச் சிட்டுக்குருவிக்கு ஒப்பிடுவதா? அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா?” எனத் தலைவரின் உரையை மீள எடுத்துச் சொல்லி பெருமிதமும் பாராட்டும் இழையோட வான்புலிகளுடன் அன்பும், பம்பலுமாக தமிழ்ச்செல்வன் கேலி பேசுகிறார்.

கதைத்து – காத்திருந்து – உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம். நிகழ்வின் மகிழ்விலும், உணவின் சுவையிலும் இருந்த உரையாடல் தலைவரைப் பற்றியும், அவரது பாதுகாப்பு, ஆரோக்கியவாழ்வு என்பன பற்றியதாகவும் அமைந்து விடைபெற்றபோது நாம் அறிந்திருக்கவில்லை அதுதான் எங்களது கடைசிச் சந்திப்பு என்று,

*****  ****  ******

எல்லாவற்றிலும் மாற்றம்வரும். ஆனால் சிலது மாறாது. காலமும், கோலமும் நவீனமானாலும், அறிவும் ஆற்றலும் மேம்பட்டு வளர்ந்தாலும், உடையிலும் பேச்சிலும் மெருகு பெற்றாலும், உள்ளத்தாலும் இன்னும் பலவற்றினாலும் மாறாமலிருந்தான் தமிழ்ச்செல்வன்.

தலைவருக்கு இப்போது தமிழ்ச்செல்வன் இளவயது மெய்க்காப்பாளனோ அல்லது இளம் போர்த் தளபதியாகவோ அல்ல. அவன் அரசியல் தலைவன். மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன்.

ஆனால் இவனோ இப்பொழுதும் அண்ணையின் குழந்தையாகவே தன்னை நினைப்பான். தன் திருமணத்தின்போது அண்ணை வரவேண்டும். ஆட்கள் வந்தால் அண்ணை வரமாட்டார். தமிழ்ச்செல்வனது திருமணச்செய்தியை நாம் கேள்விப்பட, அதற்கிடையில் தமிழ்ச்செல்வனது கடிதம் திருமணஅழைப்பு என்றும் இல்லாது, செய்தியென்றும் இல்லாது வாழ்த்தும், ஆசியும் வேண்டி, சேதிசொல்லும் கடிதம். மடல்கிடைத்து நாம் அங்குபோகையில் பாலாஅண்ணை வீட்டில் தலைவரின் முன்நிலையில் திருமணம்முடிந்து தம்வீட்டில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையும், பொம்பிளையும்.

ஒருநாள் கடற்கரையில் கடலலை கால்தொட பேரலையின் சத்தத்தில் பயந்துபோனாள் குழந்தை, “ஐயோ பெரியப்பா” என்று சொல்லி தலைவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாளாம் தமிழ்ச்செல்வனின் மகள் அலை”, “என்னடா உன்ரை மகள் அலை கடலலைக்குப் பயப்படுகிறாள்” என பம்பலாய் சொன்ன தலைவரின் வார்த்தை தமிழ்ச்செல்வனுக்கு வேதம் – சவால் – செய்தி. சிலநாட்கள் கழித்து ரேகா சொன்னான், “அலைக்கு இப்போ வீட்டில் கிணற்றடித் தொட்டியில் நீர்நிறைத்து நீச்சல்ப்பயிற்சி நடக்குது.”

உலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி. கதைத்துப்பேசி வாகாக உரையாடக்கூடிய ஆற்றலுள்ள பெரியமனிதன். ஆனால் இவனோ இந்தியஇராணுவ காலத்திலும், ஆனையிறவுக் களத்திலும், இன்னும்பல களங்களிலும் சுழன்றாடிய போராளி. எம்விடுதலைக்கு வழிவிடாது எம்மக்களைக் கொன்றுகுவிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெஞ்சினம் கொண்ட அதேபோராளி.

தமிழ்ச்செல்வன் தங்கள்பக்கம் வருகிறார் என எங்காவது ஓரிடத்தில் அல்லது ஒருமுகாமில் தடல்புடல் உணவு தயாராகியிருக்கும். ஆனால் இவனோ இந்தியன் ஆமிக்காலத்தில் அம்மை வருத்தக்காரரைச் சுகமாக்கித் தருகிற ஆச்சியிடம் – மந்துவில் ஆச்சியிடம் – பழஞ்சோற்றுக்குழையலுக்குப் போயிருப்பான்.

முக்கியசந்திப்பில் வெளிஆட்கள் வந்துபேசி, பேசிமுடித்து உணவுநேரம், ஆடம்பர மேசையில் அறுசுவை உணவு காத்திருக்கும். கதைக்க இனி விடயம் இல்லையென்ற நிலையிலிருந்து, சந்தர்ப்பமும் சரியாக அமைந்துவிட்டால், வனவள சத்தியின் இடத்தில் கூழ் – அதுவும் மட்டுவில் தலைவரின் கைவண்ணத்தில் கூழ் – நினைவுக்குவந்து ஆளை அங்கு இழுத்துப்போகும்.

ஆண்டின் முதலாம்நாள் – தன்மனதில் நினைத்த சிலவற்றை தலைவர் பகிர நினைக்க – எனக்குக் கிடைத்தது வாய்ப்பு ‘தலைவரிடமிருந்து காலைவேளை அழைப்பு’ தலைவர் தனதுஎதிர்பார்ப்புக்களினை, எண்ணங்களினை எடுத்துச்சொல்கிறார். உரையாடலுக்கிடையில் செய்தி, “தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுடன் வந்துள்ளார்.” தமிழ்ச்செல்வனது மகன் ஒளிவேந்தனது பிறந்தநாள். தலைவரின் ஆசிவேண்டி பெரியப்பாவிடம் பிள்ளைகளை அழைத்துவந்திருந்தான். திடீர்வருகை, பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவில்லை. பெரியவர்களின் உணவுதான். பேச்சுவாக்கில் தமிழ்ச்செல்வன் சொல்லிவிட்டார், “அலைக்கு இடியப்பம் அவ்வளவு விருப்பமில்லை, சாப்பிடமாட்டாள்.” ஆனால் பிள்ளையோ இடியப்பத்தை விரும்பிச் சாப்பிட்டாள். நாஊறுபட்டுவிடக்கூடாது| கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். “வீட்டில் அப்பா தாற இடியப்பம் வேறை, இது பெரியப்பா தாற நல்ல இடியப்பம்” என்றுசொல்லி தலைவர் பிள்ளையைக் கொஞ்ச தமிழ்ச்செல்வனின் புன்சிரிப்பு அசட்டுச்சிரிப்பாகி, “இனி இடியப்பம் அவிக்கவும் இஞ்சைதான் பழகவேணும்” என்று சொல்லிச்சிரித்தான்.

எல்லாம் சரிதான் தலைவருக்கு விட்டுக்கொடாமல் தமிழ்ச்செல்வன் போட்டிக்கு நிற்கும் வேளையும் ஒன்றுண்டு. அது கைத்துப்பாக்கிச் சூட்டுக்களம். தலைவர் சுடுவார். அநேகமாய் ரவைகள் பத்தும் பத்தில்(மையம்-புள்) படும். சிலவேளை ஒன்பது அல்லது எட்டு ரவை மையத்தில்பட்டு மீதிரவை சற்றுவிலகிப் பட்டுவிட்டால் தொடங்கும் போட்டி. “நீ ஒருக்கா சுட்டுப்பார்” என்று தமிழ்ச்செல்வனை அழைக்க, சிலவேளைகளில் அவன் பத்து ரவையையும் மையத்திற்குச் சுட்டு துப்பாக்கியில் பிழையில்லை என்று நிரூபிப்பான்.

அடுத்தசுற்றில் நான் சுடுகிறேன்பார் என்று தலைவர் தயாராக, கைத்தடியைப் பின்பக்கமாக முட்டுக்கொடுத்து காலை நிலத்தில் ஊன்றி தமிழ்ச்செல்வன் போட்டிக்குச்சுட களைகட்டும் போட்டி. அலெக்ஸ், ஆதவன் (கடாபி) என சூட்டுவிற்பன்னர்களுடன் களைகட்டும்போட்டி, இருள் சூழ்ந்தவேளையில் முடிவதும், அல்லது இருள் சூழ்ந்தபின்னரும் மின்சூழ் வெளிச்சத்தில் தொடர்வதுமாய் நடந்துமுடியும் போட்டி.

தமிழ்ச்செல்வன் அடிப்படைப்பயிற்சி முகாமில் அடையாளம் காணப்பட்டதே அவனது சூட்டுத்திறனால் என்பர். உடற்பயிற்சியில் எல்லோரும் ஓடிப்பயிற்சி செய்ய, பயிற்சிப்பொல்லுடன் நடந்தே மைதானத்தை வலம்வருவார் தமிழ்ச்செல்வன். பயிற்சி நிறைவு நாளன்று சூட்டுப்பயிற்சியின்போது சுடக்கொடுத்த ஒரேயொரு ரவையை மையத்திற்குச்சுட வியந்தார் பொன்னம்மான். அது குருட்டாம்போக்கில் பட்டிருக்குமோ என்று அடுத்தது கொடுக்க அதுவும் மையத்தில்பட அடுத்தடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க அத்தனை ரவைகளும் மையத்தில்பட, ‘இனி உனக்கு ரவையில்லை ஓடடா’ என பொன்னம்மான் செல்லமாய், பெருமையாய் ஓட விரட்டியதில் அடையாளம் காணப்பட்டான் தமிழ்ச்செல்வன்.

அதன்பின்னர், பொன்னம்மான் தலைவருக்கு தமிழ்ச்செல்வனை அறிமுகம்செய்ததும், சிலகால மருத்துவப்பணிகளின் பின்னர் தலைவரின் உதவியாளராக ஆனதும் பழையகதை.

அடிப்படைப்பயிற்சிமுகாமில் செய்யாத அல்லது செய்யத்தவறிய உடற்பயிற்சிகளை தலைவரின் கவனிப்பில் செய்யவேண்டிவந்தது இன்னொரு பம்பல்கதை. பயிற்சிமுடித்து சொர்ணம், இம்ரான் ஆகியோரின் பொறுப்பிலிருந்த தலைவரின் மெய்க்காப்பாளர் அணியில் செயற்பட்டதுமாக இருந்த அவன் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது யாழ்ப்பாணத்தில். 1987 இன் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து தலைவர் நாடுதிரும்பி, வேலைகளை மேற்பார்வையிட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.

யாழ்மாவட்டத்தில் மகளிர்பிரிவானது “சுதந்திரப்பறவைகள்” எனும் பெயரில் அரசியல், சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்தது. மகளிர்பிரிவினருக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவப்பயிற்சிகளை வழங்க முடிவெடுத்தபோது அதற்காக தலைவரின் நெறிப்படுத்தலில் ஆரம்பப்பணிகளை முன்னெடுத்தது தமிழ்ச்செல்வன்தான்.

தென்மராட்சிப் பொறுப்பாகவிருந்த கேடில்சின் வீரச்சாவைத் தொடர்ந்து தென்மராட்சிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தப்பட்டது தமிழ்ச்செல்வனது ஆளுமை. ஆளுமையும், அறிவும், அதிகாரமும் உயர்ந்து முன்நின்றபோதும் உள்ளிருந்த ஆத்மா அவனாகவேயிருந்தான். அதுவே தமிழ்ச்செல்வனது பெருமை.

*****  ****  ******

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் – முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் – கொக்குவில்| எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில்நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது.

தலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்குசெய்துகொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்றபோதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.

மூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக்காணிகளில் என்று அவர்கள் அக்காலப்பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரேவேளையில் வளைக்கும்பெரும்படைமுற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான்.

இந்தநேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப்பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண்-பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம்தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப்படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின்மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது.

அவசரமருத்துவஉதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டுவிட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம்| எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது| பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுகடிதக்குறிப்பிலேயே தன்மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்றபின்னர் காணிக்கைஅண்ணரின் வீட்டடியைச் சுற்றியேசுழலும் தமிழ்ச்செல்வனின் மனம்.

‘எம்நாட்டின் தலைவரின்வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கைஅண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத்தேடுதல் அதிதீவிரமானபோதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர்தானென்று தெரிந்தபோது இந்தியப்படையினர் தமது கைக்கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக்கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான்.

“தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்துவிட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே? காணவில்லையே? வின்சனுக்கு என்னவானது? அக்காவிற்கு, பிள்ளைகளுக்கு என்னவானது? நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள்.

ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி!. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.

அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல்போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.

வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை.

இனிவேறுவழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப்படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்கமுடியாததானது.

இந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக்கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம்போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.

தலைவரின்குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

மிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றிவளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.

மட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி – வருவார்கள் இவர்கள்.

சாதாரண கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து போனமைக்காகவே தமிழர்களைக் கொல்வதற்காக பீரங்கிகளை இயக்க உத்தரவிடும் இந்தியப்படை அதிகாரிகள் போராளிகளிடம் ஏமாந்தால் விட்டுவிடுவார்களா என்ன? போராளிகள் தப்பிவிட்டதனால் ஏற்பட்ட களைப்பும், கோபமும் எம்மக்கள் மீது திரும்பும்.

இந்தியப்படையினரால் எமதுதாய்நாடு முழுவதும் பட்டபாட்டிற்கு தென்மராட்சியும் விதிவிலக்காகவில்லை. எந்தவொரு யுத்தமுனைப்புமில்லாத சூழல். சாவகச்சேரி நகரத்து நவீனசந்தை.1987 ஒக்ரோபர் 27 பகல் பட்டப்பகல் பதினொரு மணி| சந்தையில் திரளாகக் கூடிநின்ற எம்மக்கள்மீது உலங்குவானூர்தி மூலம் குண்டுவீசி ஆரம்பித்தது தென்மராட்சிக்கான படுகொலைப்படலம். காலை சாவகச்சேரி சந்தையில், அங்கேயே அன்றிரவு பஸ்சில், நுணாவில், கைதடியில், பளையில், மிருசுவிலில் என தென்மராட்சியின் நிலமெங்கும் எமதுமக்களது குருதிதெறிக்க வைத்தனர் இந்தியப்படைகள். எங்களது நாட்டிற்கு ஏனிவர்கள் வந்தார்கள்? ஏன் எம்மைக் கொல்கிறார்கள்? என்ற வினாக்களுக்கு விடைதெரியாமலேயே சாகும் எமதுமக்களுக்காக அழுது கொதிப்பார்கள் தமிழ்ச்செல்வனும், அவனது தோழர்களும். அவர்களது கொதிப்பும், துடிப்பும் இந்தியப்படையினருடனான களங்களில் வெடிக்கும்.

இந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பிவைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக்கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான்.

யாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத்தரும்”  என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக்கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்றவிடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப்பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும்தென்னைமரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்லபாதுகாப்பைத்தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது.

அங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத்துப்பாக்கிகளுக்கும் ஓய்வுகொடுத்து பெரியசுடுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பலமாதகாலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோமென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி(இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம்செறிந்தநாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்கமுடியாத நாட்கள் அவை.

வடமராட்சி நெல்லியடியில் டேவிட்டின் அணி பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றிவிட்டது. மகேந்தியிடமிருந்து சிலநாட்களில் பெருமிதத்துடன் தொலைத்தொடர்பு நடைபேசியில் ஒருசெய்தி. குணாவின் அணி கனகம்புளியடியில் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளது.

தினேஸ் என்றபெயர் எதிரிகட்கு தெரியுமென்பதால் அவனோடு எப்போதுமிருக்கும் மகேந்தியின் பெயரில்தான் தமிழ்ச்செல்வனின் தொடர்புகள். தமிழ்ச்செல்வனது திட்டப்படி வாகனமொன்றில் சென்றஅணி வெற்றிகரமான தாக்குதலைச் செய்திருந்தது. தக்காளி என்ற உறுப்பினர் பெண்உடையில் சென்றிருந்தார். பொம்பிளை உடுப்புப்போட்டு தக்காளி நடந்ததையும், தக்காளியை பெண் என நினைத்து எதிரிகள் ஏமாந்ததையும் கதைக்க வெளிக்கிட்டால் சோறுதண்ணி தேவையில்லை. நுணாவிலிலும் இப்படித்தான் கண்ணிவெடி வைக்கமுற்பட அதை இந்தியப்படை கண்டுபிடித்துவிட்டது.

அப்போதைய கண்ணிவெடிநிபுணர் பரணியை களத்திலிறக்கிவிட்டான் தமிழ்ச்செல்வன். கண்ணிவெடியை வைத்துவிட்டு வந்ததையும்,எதிரிக்குத் தகவல்சொல்பவர் இவராகவும் இருக்கலாம் என்று நம்பிய ஒருவரிடம், “கண்ணிவெடி வைத்திருக்கு. ஒருவரிடமும் சொல்லவேண்டாம். கொஞ்சம் விலகியிருங்கோ கவனம”| எனச் சொல்லிவிட்டு வந்ததையும், மேஜர் தாப்பா என்ற அதிகாரியும், இன்னும் பலபடையினருமாக சூழ்ந்துவந்து எடுக்க, எதனைச் செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அந்தக் கண்ணிவெடி செய்துமுடித்ததையும் அதாவது எடுக்கவெடித்ததையும் கூறும் போது அந்தஇடம் கலகலத்து அதிரும்.

“சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாறவிரும்புவோர் வாருங்கள்” என்றுசொல்ல அங்கிருந்தஅணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டுபேர்தான். கொஞ்சநாட்களாக ஜீன்ஸ்போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாகஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப்படலை ஒன்றை படாதபாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேறமுடியாத கடைசிஆள் பதறிப்போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம்.

கச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன்உடலெல்லாம் தோய, திரும்பிப்பார்க்காமல் ஒரேஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும்போதும் அந்தஇடமெல்லாம் சிரிப்பில் அதிரும்.

தமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக்கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல்.

இந்தியப்படைகளுடன் சேர்ந்து எமதுமக்களைக் கொன்றுகொண்டிருந்த கைக்கூலிகள் மீது புகையிரதநிலையத்தடியில், சங்கத்தானையில், உசனில் என பற்பல தாக்குதல்கள் நடந்திருந்தன. மேலும் ஆங்காங்கே இந்தியப்படையை எதிர்கொண்டு சுட்டதும். தேடிப்போய்ச் சுட்டதுமான பல தாக்குதல்கள் இருந்தாலும்கூட தென்மராட்சியில் தமிழ்ச்செல்வன் அணிக்கு மகுடமாய் அமைந்தது மிருசுவிலில் அமைந்திருந்த இராணுவநிலையைத் தாக்கி அழித்ததுதான்.

*****  ****  ******

மிருசுவில் – கண்டிவீதி நெடுஞ்சாலையில் – தேவாலயசுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படைநிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம்பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்துசென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பாரஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்கவில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்லவேளையாக
பக்கஉதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது.

நாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச்செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமதுதரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்குநின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச்சுடமுடியாமல் இறந்துபோனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவஅதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணிகரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில்கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால்கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்றமுடியாமல் போனதுதான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன்.

Untitled-8-copy-600x443

மிருசுவிலில் நண்பர்களான இளைஞர்களைப் பிடித்து இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அதிலொருவர் சிவஞானசுந்தரம் – சிவரஞ்சன் என்பவர்.

அக்காலப்பகுதியில் இந்தியப் படையினர் அப்பாவி இளைஞர்களை இவ்வாறு கொல்வது அவர்களது வழமையான நடவடிக்கையாகவே இருந்தது.

இதில் வழமையில்லாமல் நடந்தது என்னவென்றால் படுகொலைக்குள்ளான இளைஞனது அண்ணனான சிவசோதி தமிழ்ச்செல்வனைச் சந்தித்ததுதான மாணவனாக இருந்த தனதுதம்பியின் படுகொலைக்காக பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் சிவசோதி என்ற இளைஞன்.

அவனைத் தயார்செய்து, இந்தியப்படையினரது பலவீனமான நிலையைக் கண்டறிந்து, வேவுபார்க்கவென கற்பித்து அந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தானே தயாரித்ததுடன், தானே நேரடியாக தலைமைதாங்கிக் களத்தில் இறங்கினான் தமிழ்ச்செல்வன். அதுவுமல்லாமல் தனதுசுடுகலனை வேறொரு போராளியிடம் கொடுத்துவிட்டு கையெறிகுண்டுகளுடன் எதிரியின் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி (LMG) நிலைக்குள் பாய்ந்துசென்று, அதனைச்
செயலிழக்கச்செய்தவுடன் தனதுசுடு கலனைப் பெற்றுத்தாக்குதல் செய்தான்.

பதினைந்து பேரளவில் பங்குகொண்ட இந்தத்தாக்குதலில் தமிழ்ச்செல்வனுடன் பரணி, சிறி, ரூபன், வீமன், கந்தண்ணை, செல்ரன், ராகுலன், சேது, அம்மா, ரவிஅண்ணை, ரேகா, பாப்பா ஆகியோருமிருந்தனர்.

தனதுசகோதரனது படுகொலைக்குப் பழிவாங்கவென இயக்கத்தைத்தேடி தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சிவசோதி, பின்னர் சிறந்தபோராளியாக, ஆற்றலுள்ள வேவுவீரனாக தமிழ்ச்செல்வனால் வளர்த்தெடுக்கப்பட்டான்.

நன்கு அறியப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் படைஅதிகாரிகள் மீதானதாக்குதலில் பங்குகொண்டு பரிசுபெற்றஅணியை வழிநடத்திச் சென்றவன், அன்று சிவசோதியாக பின்னாளில் பீற்றர் அல்லது கார்வண்ணன் என அறியப்பட்ட போராளியே.

*****  ****  ******

யாழ்மாவட்டப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மருத்துவப்பிரிவை விரிவாக்குவதிலும், மருத்துவர்களை உள்வாங்குவதிலும் தமிழ்ச்செல்வன் காட்டிய ஆர்வம் முக்கியமானது.

ஜெயசிக்குறுக்களத்தில் எம்மை அழித்துவிடலாம் என்ற மமதையுடன் சிங்களம் பெரும்போரைத் தொடுத்தது. இடைவிடாது தொடர்ந்துநடந்த இச்சமர்களில் காயமடையும் போராளிகளின் எண்ணிக்கை, நூறுகளைத் தாண்டி ஆயிரங்களாக அமைந்தது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையாக காயமடைந்த போராளிகளை இவர்கள் எவ்வாறு பராமரித்துக்கொள்கிறார்களோ என சிங்களஆட்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு எமது மருத்துவப்பிரிவின் பணியானது அக்காலப்பகுதியில் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது.

தமிழ்ச்செல்வன் தான் வீரச்சாவடைவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் ரேகாவிற்குச் சொன்னானாம், “வைத்தியைக் காப்பாற்றியிருக்கலாம். அவனுக்குப் பொருந்திப்போகும் இரத்தவகை இருப்பில் இருக்கவில்லை” என.

பூநகரிப்பெருந்தளம் மீதான எமது தாக்குதலின்போது எதிரியின் விமானக் குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் பாரியகாயமடைந்தவேளை அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் காயமடைந்து வீரச்சாவடைந்த போராளிதான் வைத்தி. சிறந்தபோராளியாக, மிகச்சிறந்த மெய்ப்பாதுகாவலனாக தனது கடமையைச்செய்து தமிழ்ச்செல்வனின்
உயிரைக் காப்பாற்றினான் அவன். பதின்நான்குவருடங்கள் கடந்தபின்னரும் மறவாதநினைவுடன் மருத்துவப்பிரிவின் தேவைபற்றியும், தன்னைக் காப்பாற்றி உயிர்கொடுத்த தோழனைப்பற்றியும் ஒருங்கேநினைக்கும் மனத்துடன் இருந்தான் என்பதுதான் தமிழ்ச்செல்வனை சராசரி மனிதர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வானபோராளியாக நினைக்கவைப்பதாகும்.

*****  ****  ******

பல்முனைஆற்றல்கொண்ட தமிழ்ச்செல்வனின் ஆளுமையின் இன்னொரு வெளிப்பாடாக சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னான யாழ்ப்பாணச் செயற்பாடுகளைச் சொல்லலாம்.

எதிரியின் முற்றுகைக்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்குள் தேர்ந்தெடுத்த போராளிகளை நிலைப்படுத்திச் செயற்படுத்தினான். யாழ்ப்பாணத்திற்குள் வெற்றிகரமாக நின்றுபிடித்த அவனது போராளிகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக வரலாற்றில் பதிவாகிவிட்ட இராணுவவெற்றிகளைக்கூட ஈட்டினர். அதற்குமேலாக மக்களையும், மாணவர் சமூகத்தையும் ஒருங்கிணைத்து வெகுசனப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தமையானது தமிழீழவிடுதலை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக பதிவான வெற்றியாகும்.

இந்த எழுச்சியானது எமதுவிடுதலைப்போரை பயங்கரவாதமாக உலகின்முன் சித்தரிக்கமுனையும் சிங்களஅரசை நிலைகுலையச்செய்தது. மக்கள் அணிதிரண்டு பொங்கிப்பிரவாகித்த இந்நிகழ்வுகள் இலங்கைத்தீவையும் தாண்டி உலகஅரங்கையே ஒருகணம் எம்மக்களை நோக்கித் திருப்பியதெனலாம்.

தமிழ்ச்செல்வனின் பல்வேறு அரசியல், நிர்வாக, சமூகப்பொறுப்புகளின் மத்தியில்கூட தெரிவுசெய்யப்பட்ட அவனது போராளிகளின் மூலமாக நாம் பெற்ற இவ்வெற்றிகள் அவனது முதிர்ந்த அனுபவத்தினதும், ஆளுமையினதும் வழிநடத்தலின் பெறுபேறே.

தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமதுமக்களிடையேயும்கூட தமிழ்ச்செல்வனின் தொடர்புகளும், அணுகுதல்களும், கருத்தூட்டல்களும் எமது விடுதலைப்போருக்கான பயனுள்ள பின்புலத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்படத்தக்கதாகும்.

*****  ****  ******

அது 1991 ஆ.க.வெ. சமரின் ஒரு கடினமான கட்டம். கடலால் இறங்கி தரையால் நகர்கின்ற எதிரியை வழிமறித்துச் சண்டையிடுகிறது தமிழ்ச்செல்வனின் அணி. கனரகவாகனம் – ஆயுதங்களுடன் நகரும் எதிரியை இலகுரகஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கும் கடினமானசண்டை அது| வீரர்கள் வீழ்ந்துவிட்டனர். வியூகம் உடைந்துவிட்டது.

பின்வாங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலைமை. அங்கு தமிழ்ச்செல்வன் அப்போது தினேஸ் – தினேசாக இல்லை. ஆவேசநிலையில் தன்நிலை உணராது, எதிரியை எதிர்ப்பதில் மட்டும் குறியாகநின்று போரிடும் தினேஸ். “தினேஸ் பின்வாங்க மறுக்கிறார்” என்று நடைபேசியில் செய்திவந்ததும், வரமாட்டேன்….. வரமாட்டேன்….. என்று குழறக்குழற ஆளைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டுவந்து சேர்த்ததும் மாறாதநினைவுகள். களத்தில் தனது
நுரையீரலைத் துளைத்தரவையின் வலியையும் உணராது ரவைபட்டதே தெரியாமல் அவனைக் கட்டிவைத்ததுதான் என்ன? இதனை விளங்கிக்கொண்டால்தான் தமிழீழ அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை விளங்கிக்கொள்ளலாம்.

தமிழனின் அடிமைவாழ்வை மாற்றியமைக்க சரியான அரசியல் தலைமை இல்லாமல் போனதே எம்மினத்தின் இன்றுவரையான அவலநிலைக்கான காரணம். எம்மினத்தின் அடிமைவாழ்வை உணர்ந்தும், தெரிந்தும் இருந்த எமது இனத்தின் மூத்த தலைவர்கள் கூட நிலைமையை மாற்றியமைக்க சரியான, துணிவான முன்முயற்சிகளை செய்யத்தவறினர்.

Untitled-9-copy-600x644

கொடுங்கோலர்களால் புரிந்துகொள்ளமுடியாத அகிம்சைவழிப்போராட்டம் தோல்வி அடைந்து, தமிழர்களுக்கு உரிமை எதையும் வழங்கமுடியாதென்று சிங்களத் தலைமைகள் ஏமாற்றி மறுத்தபோது, தந்தை செல்வாகூட “தமிழினத்தை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என ஆற்றாமையுடன் தான் உரைத்தாரே தவிர எம்உரிமையைப் பெறத் தீவிரவழியிலோ அல்லது இராசதந்திரவழியிலோ காத்திரமாகப் போராடத்துணியவில்லை.

“இந்த வல்வெட்டித்துறையிலிருந்து ஐம்பது இளைஞர்கள் முன்வாருங்கள்” என்று அங்கு சொன்னதுபோல் ஒவ்வொரு ஊரிலும் சொன்னார்கள். போராட்டத்தில் நாட்டை அமைப்பேன் என்றும் சொன்னார்கள். இயல்பாக கிளர்ந்த இளைஞர்களின் எழுச்சியைக்கூட வெற்றுக்கோசங்களால் திசைதிருப்பும் அரசியல் ஆக்கினார் அமிர்தலிங்கம்.

சுயாட்சி என்றும், ஐம்பதுக்கு ஐம்பது என்றும் தமிழரின் வாழ்வும் அரசியலும், பேச்சிலும் எழுத்திலுமாக காலத்தைக் கழித்துவர – இனத்தை மாற்றியும், நிலத்தை விழுங்கியும், மொழியை, கல்வியை பாழ்படுத்தியும் சிங்களம் தன்னாதிக்கத்தைத் தொடர்ந்தது.

தமிழர்கள் தூங்கினர். அல்ல, அல்ல தமிழ் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தூங்கினர். கியூபா, வியட்நாம், பங்களாதேஸ் வரிசையில் தமிழீழமும் விடுதலை பெறக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பைக் கைநழுவ விட்டனர்.

கையாலாகாத் தனத்துடனான எம்மவரின் கயமை அரசியலைக் கண்முன்னே பார்த்துப்பார்த்து பக்குவப்பட்டு தேர்ந்துதெளிந்த தமிழனால் – ஆம் எங்கள் தலைவரால் – விடுதலைக்கான அரசியலுக்கு அடித்தளம் அமைந்தது. வீரமும், செயலூக்கமும் கொண்ட ஆயுதப்போராட்ட அரசியல் உருவானது.

உயிர் மீதான அச்சமே கோழைத்தனத்தை உருவாக்குகிறது என்றும், தேசத்தின் விடுதலையை நகர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ளோர் இந்த அச்சநிலையைக் கடந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்வார் தலைவர்.

இந்திய அரசு எம்மக்களது விடுதலையைப் பணயம்வைத்து ஆடிய நாடகத்தில் விட்டுக்கொடுத்து விடாமல் தலைவர் உறுதியாக நின்றதற்கு காரணம் உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கை அல்ல தேசத்தின் விடுதலை பற்றிய தெளிவு.

தமிழீழ விடுதலைக்குரிய அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை அவனது துணிவுக் கூடாகவும், அர்ப்பணிப்புக் கூடாகவும் பார்த்தார் தலைவர்| தேசவிடுதலைக்கான அரசியல் பற்றிய பரந்துவிரிந்து விசாலமான தனதுகனவுகளை தமிழ்ச்செல்வனின் மனதில் பதியவைத்தார் தலைவர்.

*****  ****  ******

மக்கள்மயப்பட்ட அரசியல்அலகுகள் பற்றிய தலைவரின் எண்ணங்களை செயல்ப்படுத்துவதில் தமிழ்ச்செல்வன் மூச்சாகச் செயற்பட்டான். வறுமைப்பட்ட மக்களின் குழந்தைகள் போசாக்கின்றி இருப்பதுபற்றி தலைவரும், தமிழ்ச்செல்வனும் கதைத்துக் கொண்டிருப்பர். கொஞ்சநாள்செல்ல மொழுமொழுவென்று அழகான குழந்தையொன்றின் புகைப்படத்தையும், மிகவும் மெலிந்த இன்னொரு குழந்தையின் புகைப்படத்தையும் ஒன்றாகக் காட்டுவார் தலைவர்.

இந்தப் பிள்ளையைத்தான் எமது சிறுவர் போசாக்குப்பூங்கா பொறுப்பேற்று மொழுமொழு பிள்ளையாய் தாயிடம் திரும்பப் பொறுப்புக்கொடுக்கிறது என்று சொல்லும்போது தலைவரின் சொல்லில் மகிழ்ச்சிபொங்கும். குழந்தைகளுக்குச் சிறுவர் போசாக்குப்பூங்கா என்றால் ஆதரவற்ற முதியவயோதிபர்களைப் பராமரிப்பதற்கென மூதாளர் பேணலகம் இன்னொரு தளத்தில் செயற்படும்.

இவ்வாறு ஒவ்வொரு வயதினருக்கும், சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்தினருக்குமென ஆரோக்கியம் – சுகாதாரம் – கல்வி என ஒவ்வொரு தளத்திலுமாகக் கட்டுமானங்களை உருவாக்கி அரசியல் பணிசெய்த தமிழ்ச்செல்வனது ஆளுமை விசாலமானது.

யாழ்ப்பாணம் – வலிகாமத்தில் இருந்து ஒருபொழுதில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். நெருக்கடிகளைச் சந்தித்தோம் உண்மைதான். ஆனால் பட்டினிச்சாவோ அல்லது நோயுற்றதாலான சாவோ எதுவாயினும் ஒன்றேனும் நடந்ததாக யாரேனும் சொல்லமுடியுமா?

முழுப்பிரச்சனைகளையும் எமது இயக்கமே பொறுப்பேற்று தீர்த்துவைத்தது என்று சொல்லமுடியாதுதான். எமதுமக்களும், நிறுவனங்களும், சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் சேர்ந்து சுமந்ததால் வந்தவெற்றிதான் இது. இல்லை என்று கூறமுடியாது.

ஆனால் அதற்காக எம்சமூகத்தை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தி, இரவுபகல் பாராது களத்தில் முன்நின்று வழிநடத்தி அரசியல் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தினான் தமிழ்ச்செல்வன்.

அதுபோல்தான் தென்மராட்சியிலிருந்து வன்னிக்கும், வன்னிக்கு உள்ளேயுமான இடம்பெயர்வுகளுமாக எம்மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலைந்துதிரிந்த பொழுதெல்லாம் அவர்களுடன் நின்றனர் எம் அரசியல்ப்போராளிகள்:

எம்மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாதுபோனாலும் சீரழிந்து போகாமல் பார்த்துக்கொண்டோமென்றால் அது நிர்வாகசேவை, பொருண்மியமேம்பாட்டு நிறுவனம், தமிழீழ சுகாதாரசேவை, குழந்தைகள், பெண்கள் நலன்பேணல் அமைப்புகள் ஆகிய தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்திருந்த அரசியல் கட்டுமானங்களால்தான்.

கடல்பொங்கி ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது. பாதிக்கப்பட்ட ஆசியாவின் பலநாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சந்தித்த அழிவு கொஞ்சமல்ல பேரழிவு.

மீளஎழுந்தோம். பேரினவாதஅரசு ஆழிப்பேரலை மீள்கட்டுமானத்திட்டத்தை செயற்படவிடாமல் முடக்கித் தடைசெய்த போதும் மீளஎழுந்தோம்.

விரைவான அனர்த்த முகாமைத்துவத்திற்காக உலக அரங்கில் நாம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களானோம் என்றால், அதுவும் உலக உயர்மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு முறையாகப் பாராட்டப்படும் வகையில் செயற்பட்டுக்காட்டினோம் என்றால், எல்லா வளங்களும் கொண்ட நாடுகளை விட சிறப்பாக, வேகமாக இங்கு அவசர புனர்வாழ்வு மற்றும் சுகாதார, ஆரோக்கியப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளோமென்றால் மேற்படி எமது தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்த சமூக, அரசியல் கட்டுமானங்களால் தான்.

போரின் உச்சநெருக்கடியிலும்கூட, எதிரியின் பொருண்மியத் தடைகளின் போதும்கூட பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட எம்மண்ணில் காணமுடியாதபடிக்கு சமூக மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றால் அரசியல் வேலைத்திட்டங்களின் வீச்சைப்புரிந்துகொள்ளலாம்.

எமது அரசியல் வேலைத்திட்டங்களின் பின்னணியில் தலைவரது சிந்தனையும். வழிநடத்தலும் இருந்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தலைவரது எண்ணங்களின் செயல்வடிவங்கள்தான் இவை என்பதும் உண்மைதான்;

ஆனாலும் தலைவரின் எண்ணங்களையும், வழி நடத்தலையும் புரிந்து, தெளிந்து செயலில் நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அறிவு, திறமை, ஆளுமை என்பன ஒருங்கே பெற்ற ஆற்றலோனாகத் தமிழ்ச்செல்வன் மிளிர்ந்து, செயற்பட்டான் என்பதே உண்மை.

*****  ****  ******

விடுதலைக்கான அரசியல்பணி ஒருவகையில் சவாலானது. இறைமையுள்ள நாடு என்ற சொற்பதமானது ஆக்கிர மிப்பாளர்களது எல்லாக் கொடுமைகளுக்குமான கவசமாக அமைந்துவிடும். அதேவேளை விடுதலை வேண்டிப் போராடும் இனத்தின் தற்காப்பிற்கான போராட்டமானது பயங்கரவாதமாக முறையிடப்படும்.

இராசதந்திர அழுத்தத்திலிருந்து நாகரீகமற்ற நேரடி அச்சுறுத்தல்வரை பல பேச்சுமேசைகளில், பல படிமுறைகளில் இந்தியா எம்மை பணியவைக்க முயன்ற படிப்பினைகளையும், சிங்கள அரசு பேச்சுக்களின்போது எம்மை ஏமாற்ற முயலும் தொடர்ச்சியான அணுகுதல்பற்றியும் தலைவரிடமும், தேசத்தின்குரல் பாலா அண்ணை அவர்களிடமும் நிறையவே கற்றறிந்து புடம்போடப்பட்டவனாக இருந்தான் தமிழ்ச்செல்வன்.

எம்மக்கள் மத்தியில் இருந்த மெத்தப் படித்தவர்களது வலிமையற்ற பேச்சுக்கள், அதாவது சரணாகதிக்கான சமாளிப்புகள் இராசதந்திரமாகக் கூறப்பட்டது ஒருகாலம் தமது இனத்தையே அடிமைகொள்ளவைக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோய் காட்டிக்கொடுப்பதை இராசதந்திரமாகக் கூறப்பட்டது இன்னொருபக்கம்.

விடுதலைக்கான நியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் சரி, அதேவேளை உரையாடலைச் சிறப்பாக முன்னெடுத்து சபையின் நிலையை தனது ஆளுமைக்குள் எடுப்பதிலும் சரி தமிழ்ச்செல்வன் தேர்ந்த இராசதந்திரியாகச் செயற்பட்டான்.

மறுத்துரைக்க முடியாதபடி முன்வைக்கப்படும் அவனது கருத்துக்களுடன், உலகம் முழுவதும் அறியப்பட்டு விட்டதான அவனது புன்சிரிப்பும் சேர்ந்து அவனைச் சந்திப்பவர்களைக் கட்டிப்போடும்.

ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவன் கையாண்ட விதமும்கூட தேர்ந்துமுதிர்ந்த அரசியல் தலைவனாக அவனை உலகிற்கு அடையாளம் காட்டிநின்றது.

எமதுமக்களின் துயரங்களைக் கருத்திலெடுக்கக்கூடாது என்ற தீர்மானமான முன்கூட்டிய முடிவுடன் வருபவர்களைத் தவிர மற்றெல்லோரும் தமிழ்ச்செல்வனின் சொல்வன்மையினால் கட்டுண்டு எம் நியாயங்களை உணர்ந்துசென்றனர் என்பதே உண்மை.

தலைவர் உணர்வூட்டியது பாதி மற்றும் பாலா அண்ணையிடம் கேட்டறிந்ததும், தானாக கற்றுணர்ந்ததும் மீதியாக முதிர்ந்த அரசியல்தலைவனாக, இராசதந்திரியாக, பேச்சுவார்த்தையாளனாக தமிழ்ச்செல்வன் பரிணமித்தான்.

தமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனானது அவனது சிறப்பாற்றலினதும், நேர்மையான விடுதலைப் பற்றினதும் வெளிப்பாடு என உறுதியாகக் கூறலாம்.

ஈழத்தமிழினத்து வரலாற்றில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டு விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் சார்பிலும்கூட தமிழ்ச் செல்வனது இராசதந்திரத் திறனும், அணுகுதலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும்.

*****  ****  ******

தலைவர் அரசியல்பொறுப்பாளராக தமிழ்ச்செல்வனை மிக உயர்வாக மதித்தார். தமிழ்ச்செல்வனது கருத்தறியாது தலைவர் செயற்படுத்தும் விடயங்கள் அரிதாகவே இருக்கும்.

அதேவேளை நிர்வாக விடயங்களில் அல்லது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தவறு நிகழும்போது கண்டிக்கவும் தவறமாட்டார். பொதுமக்களுக்கு எங்காவது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவோ, எம்மால் தீர்க்கப்படக்கூடிய குறைபாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவோ, நிர்வாக விடயங்களில் நியாயமின்மை நிகழ்ந்ததாகவோ முறைப்பாடுகள் கிடைக்கும் வேளையில் தலைவரது கோபம் வெளிப்படும். தலைவரது இந்தக் கண்டிப்பை யாராவது வேறுவிதமாக விளங்கி தமிழ்ச்செல்வனை குறைசொல்லி அவனது பணிகளைப் பங்கப்படுத்த முற்பட்டாலும் உடனே தலைவருக்குக் கோபம்வரும்.

தமிழ்ச்செல்வனது செயற்பாடுகளின் தாக்கத்தையும், அவரது சாதனைகளையும் எடுத்துக்கூறவும் தயங்கமாட்டார் தலைவர். அன்பும், கண்டிப்பும், உறவும், உரிமையும், கோபமும், பாசமும் கொண்ட அவர்களது உறவு அற்புதமானது.

எங்காவது, யாராவது ஒருபோராளி அல்லது பணியாளர் தவறுசெய்து அதுவொரு விடயமாக ஆகிவிட்டதென்றால் தலைவரிடம் வரும்போது சங்கடத்துடனும், சஞ்சலத்துடனுமிருப்பான் தமிழ்ச்செல்வன். தலைவரிடம் கதைத்துத் தெளிவுபடுத்தியபின் புறப்படும்போது, “இடைக்கிடை பேச்சுவாங்கித் தெளிந்தால்தான் நல்லது” என சிரித்துக்கொண்டே சொல்வதைக் காணலாம்.

எம் இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த அவனது குரல்… இன்னும் ஓயவில்லை, இனியும் ஓயாது, எம் விடுதலைவரை ஓயாது.

வாழ்ந்தபோது செய்ததையே அவன் வீழ்ந்தபோதும் செய்தான். கைத்தடி தாங்கிய அந்தப் புன்னகைச் செல்வனின் முகம் உலகின் மனச்சான்றின் முன்னே, உலகத் தமிழினத்தின் முன்னே எழும்பிய வினாக்களுக்கான விடையை, சிங்களம் சொல்லும்காலம் வரும்.

தமிழ்ச்செல்வன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பது எவ்வளவுதூரம் உண்மையோ, தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரியமாட்டான் என்பதும் அதேயளவு உண்மை.

தமிழீழம் பற்றிய கனவாக, அந்தக்கனவின் செயல் வடிவத்திற்கான நிர்வாக அலகுகளாக, அந்த நிர்வாகங்களை இயக்குகின்ற ஆளுமைகளாக வாழ்கிறான், வாழ்வான். என்றும் வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்.

– ச.பொட்டு  (புலனாய்வுத்துறை பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகள்)
   விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி – கார்த்திகை 2007 )

பகிரவும்...