Main Menu

அமெரிக்காவின் தாக்குதல் : ஈரானில் மூன்று நாட்கள் துக்க தினம் அறிவிப்பு

ஈரானின் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டமைக்கு மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுலைமானின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஈரானில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவித்தார்.

மேலும், ஈரானின் புரட்சிகரப் படையின் முன்னாள் கொமாண்டர் மோசின் ரேஸாய் அமெரிக்காவைப் பழிவாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தை சேதமாக்கினர்.

இதற்குப் பதிலடியாக இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி, ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்ரகன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 3 நாட்கள் துக்க தினத்தை ஈரான் அறிவித்துள்ளது.k

பகிரவும்...