Main Menu

அபராதத்துடன் தப்பித்த ஆர்ச்சர்: 3ஆவது போட்டிக்கு தடையில்லை

உயிர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக 2ஆவது டெஸ்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அபராதத்துடன் தப்பித்துள்ளார்.

கொரோனா தடுப்பு விதிகளை மீறி மான்செஸ்டர் விளையாட்டரங்கிற்கு செல்லும் வழியில் தனது வீட்டுக்கு சென்று வந்த ஜோப்ரா ஆர்ச்சர் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளானார்.

இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்ட அவரை, 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இதில் அவருக்கு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டதுடன், எழுத்துபூர்வமாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அபராதத்துடன் தப்பியதால் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இறுதி டெஸ்டில் விளையாடுவதில் உள்ள சிக்கல் நீங்கியது.

இந்தநிலையில் இரண்டு முறை கொரோனா சோதனை நடத்தப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால், 21ஆம் திகதி அவரால் அணியுடன் இணைந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...