Main Menu

கொரோனா பரவலுக்கு மத்தியில் ரஷ்யாவில் வீதிக்கு இறங்கிய ஆயிரக் கணக்கான மக்கள் – ஆளுநரை விடுதலை செய்யக் கோரி போராட்டம்

ரஷ்யாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலையில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாகாண ஆளுநரை விடுதலை செய்யக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஷ்யாவின் ஹபர்ஸ்வோக் மாகாண ஆளுநராக செயற்பட்டு வரும் செர்ஜி ஃப்ர்ஜர், 2018ஆம் ஆண்டு நடந்த மாகாண ஆளுநர் தேர்தலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொழிலதிபர்கள் கொலைச்சம்பவங்களில் செர்ஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறி பொலிஸார் கடந்த வாரம் அவரை கைது செய்தனர். இந்த கைது சம்பவம் அம்மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, ஆளுநருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஜனாதிபதி புதினின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்ததால் வேண்டுமென்றே செர்ஜி கைது செய்யப்பட்டதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் செர்ஜி கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஹபர்ஸ்வோக் மாகாண மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு எதிராகவே இந்த போராட்டங்கள் பெரும்பாலும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் போராட்டம்  8ஆவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் ரஷ்யாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதேவேளை, ஆளுநர் செர்ஜி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் ஒருவேளை நிரூபிக்கப்பட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...