Main Menu

அடுத்தடுத்து பெண்கள் வன்கொடுமை- மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேற்றம்

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது அசிட் வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஹைதராபாத் மற்றும் உன்னாவ் சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில், பாலியல் வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

30 வயது பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது முசாபர் நகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தொடர்ந்து இருந்தார். ஆனால், முறைப்பாட்டை திரும்பப்பெறுமாறு வன்கொடுமை செய்த கும்பல் அந்தப் பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்தனர். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், குறித்த பெண் மீது அசிட்டை வீசியது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை தேடிக்கொண்டிருக்கிறோம் எனவும், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை,‌‌ பாலியல் வன்கொடுமை‌ செய்தவர்கள் பிணையில் வெளியே வந்த பின்னர் பெற்றோல் ‌ஊற்றி தீ வைத்தனர்‌.

டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...