கல்கி பகவானின் பினாமி சொத்துக்கள் முடக்கம்!
கல்கி பகவான் என அழைக்கப்படும் சாமியார் விஜயகுமாருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் குறித்த சொத்தினை முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்த சொத்துக்கள் அனைத்தும் விஜயகுமாரின் மகன் என்.கே.வி கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ப்ரீத்தா ஆகியோர் மூலம் வாங்கப்பட்டு பினாமிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது. இதன்போது 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பும், கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இவற்றை தவிர 44 கோடி ரூபாய், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் டுபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் கல்கி குடும்பத்தினரால் 100 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கல்கி விஜயகுமார் குடும்பத்தினரின் 907 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.