Main Menu

சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதி அளித்தவர்கள் செய்வது என்ன? – ரணில் கடும் கண்டனம்

சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடம் ஏறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கண்டனத்துக்கு உரியைவை என ஐக்கிய தெசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மை மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை புறக்கணிக்கப்பதாகவே தோன்றுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இச்சாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் தெரிவிக்கையில், “ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு முரணாகவே சம்பிக்க ரணவக்கவின் கைது இடம்பெற்றிருக்கிறது என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சம்பிரதாயங்கள் மீறப்பட்டிருக்கின்றன. சபாநாயகருக்கு அறிவிக்கப்படாமலேயே இந்தக் கைது இடம்பெற்றிருக்கிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த வழக்கு ஒன்று தொடர்பாகவே சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவ்வாறு செய்வதற்கான நியாயமான காரணங்கள் எதனையும் பொலிஸார் தற்போதுவரை வெளிப்படுத்தவில்லை.

எமது கடந்த ஆட்சிக் காலத்தில் நீதிமன்றம், பொலிஸ், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அரச சேவைகள் அனைத்தும் எவ்வகையிலும் அரசியல் மயப்படுத்தப்படாமல் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம்.

ஆனால் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மை மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை புறக்கணிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணி கடும் கண்டனத்தையும், விசனத்தையும் வெளியிடுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...