இந்தோனேசியாவில் குழந்தைகளைக் கடத்திய வழக்கில் 18 பெண்கள் உட்பட19 பேருக்குச் சிறைத் தண்டனை
இந்தோனேசியாவில் 34 குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 19 பேருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் கடத்தல் வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்ட 70 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கு அதிகபட்சமாக ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய குற்றவாளிகளுக்கு, குற்றத்தில் அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மேற்கு ஜாவாவில் குழந்தைகளைச் சட்டவிரோதமாக வாங்கிய இந்தக் கும்பல், அவர்களை இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில், குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு விற்பனை செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட 34 குழந்தைகளில் 12 குழந்தைகள் சிங்கப்பூரில் இருப்பதாக நம்பப்படுகிறது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 18 பேர் பெண்களாவர்.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தோனேசியக் கடத்தல் கும்பலின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவரிடம், தத்தெடுப்பதற்காகக் குழந்தைகளைத் தேடித் தருமாறு சிங்கப்பூர் தொடர்பாளர்கள் அணுகியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த வலையமைப்பை சேர்ந்தவர்கள் மேற்கு ஜாவாவில் குழந்தைகளைச் சட்டவிரோதமாக விலைக்கு வாங்கி, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் தத்தெடுப்பதற்காக விற்றுள்ளனர்.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது பச்சிளம் குழந்தையை தத்தெடுப்பதற்காக வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர், தனது குழந்தை கடத்தப்பட்டதாகக் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து இதற்கான விசாரணைகள் தீவிரமடைந்தன. இதன் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் குழந்தைக் கடத்தல் வலையமைப்பைக் கைது செய்ததாக இந்தோனேசியக் காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவிலிருந்து தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான குடியுரிமை விண்ணப்பங்களை, நடந்துவரும் விசாரணைகள் காரணமாகச் சிங்கப்பூர் அரசு கடந்த ஜனவரி மாதம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
பின்னர், 2026 ஏப்ரலில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 19 பேருக்கு எதிரான நீதிமன்ற விசாரணை தொடங்கியதுடன், அப்போது குறைந்தது 12 குழந்தைகள் ஏற்கனவே சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
