மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு
ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டாவது இரவாகப் பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் மூலோபாய மையங்கள் மீது தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களால் ஈரானில் கடந்த இரண்டு நாட்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரானின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள புஷெஹ்ர் , சபஹார் , பண்டார் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட முக்கிய ஈரானிய நகரங்களை இலக்கு வைத்து அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இத்தாக்குதல்கள் குறித்துப் பேசியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேசச் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை ஈரான் குறிவைத்துள்ளது.
இதன்படி, அமெரிக்க ராணுவத் தளங்கள் செயல்பட்டு வரும் அண்டை நாடுகளான பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அரபு நாடுகளும் தற்பொழுது பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளன.
இதற்கிடையில், சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் ஈராக்கின் நஜாஃப் (Najaf) மற்றும் கர்பலா (Karbala) ஆகிய புனித நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
