500 கோடி ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிக்குமா? : பெல்ஜியம் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு
இன்னும் 500 கோடி ஆண்டுகளில் ஹைட்ரஜன் ஆற்றலை இழந்து சூரியன் பேரழிவைச் சந்திக்கும் போது, பூமியும் சேர்ந்தே அழியும் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பூமி தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சூரியன் விரிவடைந்து அழியும் காலகட்டத்தில், அதன் நிறை (Mass) மிக வேகமாகக் குறையும் என பெல்ஜியம் விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். இவ்வாறு சூரியனின் நிறை குறைவதால் அதன் ஈர்ப்பு விசை பலவீனமடையும்.
இதன் காரணமாக, பூமி தற்போது தான் பயணிக்கும் பாதையை விட்டு விலகி, தூரமானதொரு பாதுகாப்பான சுற்றுப்பாதைக்குச் சென்று பேரழிவிலிருந்து தப்பிக்கலாம் என்று அந்த ஆய்வில் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஆய்வு ‘வானியல் மற்றும் வானியற்பியல்’ (Astronomy and Astrophysics) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
