Main Menu

இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொண்ட இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

இலங்கை நாடாளுமன்றத்தின் பெண்கள் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் (Women Parliamentarians’ Caucus) 19 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், கடந்த மே 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் சென்ற இக்குழுவில், 15 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட 4 உயர் அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு இந்தியாவிற்கு இவ்வாறானதொரு கூட்டு விஜயத்தை மேற்கொள்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் கூட்டுத் தொலைநோக்கு பார்வைக்கு அமைவாக, இரு நாடுகளின் பெண் தலைவர்களுக்கிடையிலான தொடர்புகளையும் நாடாளுமன்ற ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் ஜனநாயகத்திற்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) ஆகியன இணைந்து இந்த விசேட தூதுக்குழுப் பயணத்தை ஒருங்கிணைத்திருந்தன.

இந்த விஜயத்தின் போது, இந்திய மக்களவை (Lok Sabha) சபாநாயகர் ஓம் பிர்லாவைத் தூதுக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அத்துடன், இந்தியப் பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி மற்றும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோரையும் சந்தித்து விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.

இச்சந்திப்புகளின் போது, பெண்களின் தலைமையிலான வளர்ச்சி, பாலின சமத்துவம், தாய்-சேய் நலன், பராமரிப்புப் பொருளாதார முன்முயற்சிகள், மற்றும் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பெண்களின் தலைமைத்துவம் போன்ற விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பெண்கள் (Empowerment) மற்றும் சிறுவர் நலன் சார்ந்த இந்தியாவின் நிர்வாக மாதிரிகள் குறித்து இலங்கைத் தூதுக்குழுவினருக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக டெல்லி பொலிஸார், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பெண்களின் சுயஉதவிக் குழுக்களுடன் (Women Self-Help Groups) அவர்கள் கலந்துரையாடினர்.

 

மேலும், இந்தியாவின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அமைப்பான ‘ஆதார்’ (UIDAI) அலுவலகத்திற்குச் சென்ற குழுவினர், உள்ளடக்கிய சேவை விநியோகத்தில் டிஜிட்டல் அடையாளத்தின் முக்கியத்துவத்தைக் கேட்டறிந்தனர்.

FICCI மகளிர் அமைப்பினால் (FLO) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வட்டமேசை மாநாட்டிலும் கலந்துகொண்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் பெண்களின் பங்கு பற்றி அவர்கள் விவாதித்தனர்.

நாடாளுமன்ற நடைமுறைகள், பாலின வரவுசெலவுத் திட்டம் (Gender Budgeting) மற்றும் நாடாளுமன்றக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான விசேட அமர்வுகளையும் PRIDE நிறுவனம் நடத்தியிருந்தது.

கலாசாரப் பரிமாற்றத்தின் ஒரு அங்கமாக, உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலுக்கு இலங்கைத் தூதுக்குழுவினர் விஜயம் செய்தனர்.

புதுடெல்லியில் உள்ள இந்தியா கேட், தேசிய போர் நினைவிடம் மற்றும் ராய் பித்தோரா கலாசார வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ‘தி லைட் அண்ட் தி லோட்டஸ்’ என்ற புத்தரின் புனித சின்னங்கள் அடங்கிய கண்காட்சியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான நாடாளுமன்றத் தொடர்புகளை மேலும் ஆழமாக்குவதற்கும், நிலையான வளர்ச்சியை நோக்கிப் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கும் இந்த முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாக இரு நாட்டுத் தரப்புக்களும் தெரிவித்துள்ளன.