மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (18) மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் தலைமையில் இன்று (18) காலை மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக இடம் பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
கடந்த 70 ஆண்டுகளாக தன்மானம் சுயமரியாதை சமூக சம நீதி மறுக்கப்பட்ட சமூகமாக பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான போராட்ட வடிவங்களுடன் கால நீட்சி கரைந்து ஓடி எழுபது ஆண்டுகள் கடந்து விட்ட போதும் கூட வாழ்வியல் சமத்துவ உரிமை மறுக்கப்பட்ட சமூகமாகவே தொடர்ந்து சிங்கள ஏகாதிபத்திய பௌத்த தேசியவாத மேட்டிமைவாதிகளால் நசுக்கப் படுகின்றோம் என்பதே மிகுந்த வேதனைக்குரிய விடயம்.
உலகளாவிய ரீதியிலே மனித உரிமைகள் உச்சம் தொட்டிருக்கும் போது பௌத்த பஞ்ச சீலத்தை முன்னிறுத்தி ஆட்சி செய்கின்றோம்.
எனும் மாய விம்பத்தை காட்டும் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து தமிழர்களை அடிமைகளாக நசுக்குகின்ற நாசகார வேளையிலே ஈடுபடுகிறார்கள்.
காலத்துக்கு காலம் கட்சிகள் மாறி ஆட்சிகள் மாறுகின்ற போதும் கூட பௌத்த தேசிய வாதத்தின் மனோநிலை என்பது மாறவே இல்லை .
பல நாடுகளின் கூட்டு சதியால் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை 17 ஆண்டுகளைக் கடந்து விட்ட போதும் கூட காணாமல் ஆக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679. இவை அரசின் புள்ளி விவரங்களில் காட்டுகின்ற எண்ணிக்கை .
இவர்கள் எங்கே என்கிற கேள்விக்கு இதுவரை சர்வதேச சமூகமும் பதிலளிக்கவில்லை ஏனெனில் அவர்களும் இந்த இனப்படுகொலையின் பங்குதாரர்களே ..
கால நீட்சி சாட்சியங்களையும் ஆதாரங்களையும் காலாவதியாகி கொண்டே போகிறது. நீதி மறுக்கப்பட்டு சுயமரியாதை இழந்த சமூகக் கட்டமைப்பின் இரண்டாம் தர பிரஜைகளாக இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விரும்புகிறதா? என்கின்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எழுகிறது.
கொலைகாரர்களிடமும் கொலைகாரர்களின் பங்குதாரர்களிடமும் நீதியின் நிழலைக்கூட பெற முடியாது இந்த உலகம் கசாப்புக் கடை முதலாளிகளின் கூடாரமாக காணப்படுகிறது.
தமிழ்க் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் உள்ளூரில் சில அமைப்புகளும் இனப்படுகொலையை மூலதனம் ஆக்கிக் கொண்டார்களே தவிர கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு முறையில் எந்த முன்னெடுப்புகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இனப்படுகொலைக்கு சாட்சியமாக ஒழுங்கு முறையாக ஒரு நினைவேந்தல் தூபி கூட நிறுவப்படவில்லை. அதை நிறுவுவதற்கு நினைவேந்தல் குழு கூட ஒழுங்காக அமைக்கப்படவில்லை.
இப்படி சகல விடயங்களிலும் தோற்றுப் போகும் ஒரு இனமாக தமிழினம் கடந்த 17 ஆண்டுகளாக தோல்வி மனநிலையில் இருந்து கொண்டு இயலாமையில் இருந்து கொண்டும் மற்றவர்களை எதிர்பார்த்து தங்கி வாழும் மனோ நிலையில் இருப்பது தான் தமிழினத்தின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது.
நீதி என்பது பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருக்க வேண்டும் .ஆனால் இன்றைய சமூக நீதி அதிகாரத்தின் பக்கம் தான் தலை சாய்கிறது என்பது பாதிக்கப்பட்ட சமூகத்தின் விசனமாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் யாரை நம்புவது என்று தெரியாமல் யார் யாரையோ எல்லாம் நம்புகிற காலச் சூழல் ஏற்பட்டிருக்கிறது .
அரசியல் ரீதியான இனப் படுகொலையை அரசியல் கட்சிகள் வாக்குக்காக நோக்குவதே இனப் படுகொலைக்கான நீதி இன்னும் நீர்க்குமிழி ஆகவே தொக்கி நிற்கிறது
மீட்பருக்காக காத்திருக்கிறது இந்த தேசம். பாதிக்கப்பட்ட மக்களுடைய உணர்வை இதுவரை எவரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
அந்த மக்களின் கண்ணீரும் வற்றிப் போய்விட்டதே தவிர நீதியின் கதவுகள் ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது என்பதே பட்டறிவு அனுபவமாக காணப்படுகிறது. உலகம் அநீதி யாளர்களின் நண்பராகவே காணப்படுகிறது.என குறிப்பிடப்பட்டுள்ளது.
