ஐ.தே.க.வின் வெற்றிக்காக தமிழர்களை அடகு வைத்துள்ள கூட்டமைப்பினர் – ஜே.வி.பி.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக தமிழ் மக்களை அடகு வைத்துள்ளதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, கூட்டமைப்பு தமிழ் மக்கள் குறித்து சிந்திக்காது தமது இருப்பு குறித்தே சிந்திப்பதாகுவம் குற்றஞ்சாட்டினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
ஈழமும் இல்லை தமிழர்களும் இல்லை என கூறும் உதய கம்மன்பில போன்றவர்களும் அதேபோல் ஈழம் பிரகடனம் செய்த வரதராஜ பெருமாளும் கோத்தாபயவுடன் தான் உள்ளார். இது குறித்து மக்களின் நிலைப்பாடு என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றது இது குறித்து மக்களின் நிலைப்பாடு என்ன என்பதே அறிய வேண்டும்.
கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் முழுமையாக நாசமாகும். ஆனால் அந்த ஜனநாயகத்தை ஐக்கிய தேசிய கட்சியினால் பெற்றுக்கொடுக்க முடியாது. தேசிய மக்கள் சக்தி இந்த இருவருக்கும் சிறிதும் அஞ்சாத கட்சியாகும். எம்மால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும், ஜனநாயகத்தை உருவாக்கவும் முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.