Main Menu

1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்தது: பிரான்ஸிடம் அவசர உதவி கோரும் மொரீஷியஸ்

மொரீஷியசில் 3,800 டன் பெட்ரோலுடன் பாறை மீது சரக்கு கப்பல் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியுள்ளது.

தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் அரசு பின்னடைவை சந்தித்துள்ளது.

அரசின் முயற்சிக்கு பெரிதாக பலன் கிடைக்காததால், எதிர்வரும் நாட்களில் கப்பல் முழுவதுமாக உடைந்து ஒட்டுமொத்த பெட்ரோலும் கடலில் கலக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடலில் கசிந்துள்ள பெட்ரோலை அகற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் தங்களிடம் இல்லாததால் பிரான்சிடம் அவசர உதவி கோரி மொரீஷியஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், கசியும் பெட்ரோலால் மொரீஷியஸ் நாட்டின் கடல்வளம் பாதிக்கப்படும் என கவலை வெளியிட்டுள்ள மொரீஷியஸ் அரசு, நாட்டில் சுற்றுச்சூழல் அவசர நிலையை அரசு பிரகடனப்படுத்தியது.

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் 3,800 டன் பெட்ரோலுடன் கடந்த மாதம் 25ஆம் திகதி இந்திய பெருங்கடல் தீவு நாடான மொரீஷியஸ் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக அறியப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் இந்த கப்பல் மோதி நின்றது. சேதமடைந்த கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே சமயம் பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியுள்ளது.

மொரீஷியஸ் உணவு மற்றும் சுற்றுலாத்துக்காக அதன் கடல்களை முக்கியமாக சார்ந்துள்ளது. இது உலகின் மிகப்பழமையான பவளப் பாறைகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...