Main Menu

ஹொங்கொங்கில் சீன இராணுவம் குவிப்பால் பரபரப்பு

ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை ஒருங்கமைத்து வழிநடத்திய ஜனநாயக சார்பு செயற்பாட்டாளரான ஜோஷூவா வொங் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், கட்டாயப்படுத்தப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்டு பின்னர் பொலிஸ் தலைமையத்திற்கு அழைத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அந்நாட்டு நிர்வாகம் முடிவு செய்தது.

இதை எதிர்த்தும், குறித்த சட்டமூலத்தினை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறன. இந்த போராட்டத்தை ஒடுக்கும் பணியில் தற்போது வரை சீன இராணுவம் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால் போர் மற்றும் போராட்டங்களை ஒடுக்குவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகளை செய்து வந்துள்ள நிலையில், அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...