Main Menu

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை கோள்களால் பாதிப்பு!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்திய செயற்கைகோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்று வானியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதற்காக சுமார் 12 ஆயிரம் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக கடந்த மாதம் தலா 227 கிலோ எடை கொண்ட 60 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் அந்த செயற்கை கோள்கள், நட்சத்திரங்கள் நேர்கோட்டில் அணிவகுத்து செல்வதைப் போல் காட்சி அளிக்கின்றன. செயற்கைகோள்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் நட்சத்திரங்கள் போன்று ஜொலிக்கின்றன.

அந்த செயற்கைகோள்களை வெறும் கண்களால் கூட காண முடியும் என்பதால் வானியல் தோற்றத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள வானியல் ஆய்வாளர்கள், விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த செயற்கைகோள்கள் ரேடியோ அதிர்வெண்களையும் உமிழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைப் போல் அமேசான் நிறுவனமும் இணைய சேவைக்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

பகிரவும்...