வௌிநாட்டு பிரஜைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டுவில் பூரண ஹர்த்தால்
வௌிநாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (12) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பித்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கோரோனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று (11) தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்படுகின்றது.
பாடசாலைகள் இயங்குகின்ற போதிலும் மாணவர்களின் வரவு குறைவான நிலையிலேயே இருப்பதை காணமுடிகின்றது. அரச அலுவலகங்கள் இயங்குகின்ற நிலையிலும் மக்களின் வரவு குறைவாக காணப்படுவதன் காரணமாக அரச அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெறுகின்ற போதிலும் உள்ளுர் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இத்தாலி, ஈரான், கொரிய நாட்டில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவர்களில் கொரோனா அறிகுறிகள் தென்படுவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டு பிரஜைகளை கொரனாவில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஆனால் வெளிநாட்டவர்களை அழைத்து வந்து பராமரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.
இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் இந்த மாவட்டம் தனிப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்ததில் இருந்து எமது மாவட்டத்தினை பாதுகாக்க வீட்டுக்குள் முடக்கி வீதிகளை வெறிச்சோடச்செய்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் என தமிழ் உணர்வாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.