Main Menu

வெள்ளத்தில் சிக்கியது மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில்: 700 பயணிகளை மீட்கும் பணி தீவிரம்

மும்பை- பதல்பூரில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்  ரயில் சிக்கிக் கொண்டது.

இந்நிலையில் அதில் சிக்கியுள்ள 700 பயணிகளையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் மீட்பு பணியை துரிதப்படுத்துவதற்கு ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக  அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்தேரி, உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

கனமழையால் சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 150 முதல் 180 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

மேலும்  இன்று மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதென  வானிலை அவதான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சிக்கியது. அதில் பயணித்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...