Main Menu

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த எந்திரங்களை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும், பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களும் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்படும்.

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த 3 இடங்களிலும் ஓட்டு எண்ணும் நாள் வரை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். முதல் அடுக்கு பாதுகாப்பில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் இருப்பார்கள். 2-வது அடுக்கு பாதுகாப்பில் ஆயுதப்படை போலீசார் பணியில் இருப்பார்கள். 3-வது அடுக்கு பாதுகாப்பில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

3 ஓட்டு எண்ணும் மையங்களிலும் ஓட்டு எண்ணப்படும் நாள் வரை தினமும் 1,000 போலீசார் சுழற்சி முறையில் காவல் பணி செய்வார்கள். ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் தேவநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பகிரவும்...