வவுனியாவில் வாக்கு எண்ணும் பணி தீவிரம் – அரச அதிபர்
ஜனாதிபதி தேர்தலில் வவுனியாவில் 75.12 வீதம் வாக்குகளும் வன்னி தேர்தல் தொகுதியில் 74.34 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான எம்.கனீபா தெரிவித்தார்.
வாக்களிப்பு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இன்று மாலை வரை சிறியளவிலான 63 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. வாக்குச் சாவடிகளிலிருந்து மாவட்ட செயலகத்திற்கு வாக்குபெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன.
இதேவேளை மாலை 5 மணியிலிருந்து தபால் வாக்குகளும், ஏனைய வாக்குகள் மாலை 7 மணியிலிருந்தும் எண்ணப்படும். இதற்காக வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் 20 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக வவுனியா மாவட்டத்தில் 1,728 அரச ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.