Main Menu

ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றம்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில், மூன்றாவது நாளாக நேற்று (புதன்கிழமை) பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தி, அங்கிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா தாக்குதலுக்கு இந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் மற்றும் பிற அமைதியான வழிமுறைகள் மூலம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஐ.நா.பொதுச் சபையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 3இல் 2 பங்கு ஆதரவு தேவை என்ற நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.

141 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் எதிராக வாக்களித்தன. இலங்கை உட்பட 35 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இதையடுத்து பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

பகிரவும்...