Main Menu

யாழில் உயிரிழந்த தந்தையின் உடலையாவது பார்க்க அனுமதி வேண்டும் – முருகன் வேண்டுகோள்

தந்தையின் உடலையாவது இறுதியாகப் பார்க்க அனுமதி வழங்க வேண்டுமென்று சிறையில் உள்ள முருகன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முருகனின் தந்தை இன்று அதிகாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

இந்நிலையில் கடைசியாகத் தந்தையின் உடலையாவது ஒரு முறை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாகச் சிறையில் உள்ள முருகனும் இலங்கையில் உள்ள அவரின் குடும்பத்தினரும் தமிழக அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழக அரசும் விடுதலை செய்யும் முடிவில் உள்ளது. ஆனாலும், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் ஏழு பேரின் விடுதலையும் தாமதமாகி வருகிறது.

இந்த நிலையில், முருகனின் தந்தை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வந்தன. இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு `மிக அவசரம்’ என்று குறிப்பிட்டு முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று முன்தினம் இரவு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், முருகன் என்கிற ஸ்ரீகரனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க சிறையில் உள்ள முருகனுக்கு மனிதாபிமான அடிப்படையில் காணொளி அழைப்பு மூலம் உரையாட அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட போதும் அனுமதி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவரது தந்தை உயிரிழந்துள்ள நிலையில் தந்தையின் உடலையாவது ஒரு முறை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...