Main Menu

பேராபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்- சிவசக்தி ஆனந்தன்

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர்கள் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “நாடளாவிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸின் பரவலால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, மகசின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 74பேர் வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் ஆபத்துக்குள் சிக்கியுள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று குறித்த சந்தேகம் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள் பலர் ஒவ்வொரு சிறைக்கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பிலும் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாதுள்ளன. ஆகவே அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எவ்விதமான உறுதிப்பாடுகளும் அற்ற நிலையிலேயே சிறைக்கூடங்களில் உள்ளார்கள்.

தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரையில் தண்டனைக்கும் அதிகமான காலத்தினை சிறைச்சாலைகளிலேயே கழித்துவிட்டனர். அவர்களின் விடுதலையை மாறிமாறி வரும் ஆட்சியாளர்கள் அரசியலுக்காகவே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது ஆபத்தானதொரு அவசர நிலைமை நாட்டில் நிலவுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஆகக்குறைந்தது அவர்களுக்கு தற்காலிக பிணை அனுமதியுடன் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்காகவாவது அனுமதியளிக்க வேண்டும்.

இவ்விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் விசேட கவனம் எடுக்க வேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்ற ஜனாதிபதி, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக கூறியிருந்தார். விசேடமாக பிரதமரின் புதல்வர் சிறைக்குச் சென்ற தருணத்தில் தமிழ் சிறைக் கைதிகளின் அவலத்தினை நேரில் பார்த்ததாகக் கூறுகின்றார்.

ஆகவே, மேசமான அவலங்களுக்குள் சிக்குண்டிருக்கும் அவர்களின் நிலைமைகளை உணர்ந்து உடன் நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகின்றது. இந்த விடயத்தில் எதிர்த் தரப்புக்கள் அனைத்தும் கூட்டிணைந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...