Main Menu

முன்னாள் போலீஸ் அதிகாரியின் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட 24 மனித உடல்கள் கண்டெடுப்பு

எல் சல்வடோர் நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் உள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளில் எல் சல்வடோர் என்ற நாடும் அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் உள்ளது. இங்கு பலர் மர்மமான முறையில் காணாமல் போவதும் அது தொடர்பாக பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையிலும் உள்ளன. 
இதற்கிடையில், அந்நாட்டின் தலைநகர் சன் சல்வடோர் நகரில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷ். 

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் இருந்து ஓய்வுபெற்று சன் சல்வடோர் நகரில் இருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாஹல்ஷுபா என்ற பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். 
இந்நிலையில், ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷ் பணியாற்றிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு முதல் பலர் மாயமானது தொடர்பாக ஹிஹோ மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஹிஹோ தங்கி இருந்த வீட்டில் கடந்த வியாழக்கிழமை போலீசார் சோதனை நடத்தினர். ஹிஹோவின் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த தோட்டப்பகுதியில் மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த தோட்டப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டி போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த இடத்தில் 24 மனித உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 24 மனித உடல்களின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
மொத்தம் 40 உடல்கள் இருக்கலாம் என்று சந்தேகித்துள்ள போலீசார் எஞ்சிய உடல்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதைக்கப்பட்டவை யாருடைய உடல்கள், எத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே இவை இங்கு புதைக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். 
மேலும், வீட்டுத்தோட்டத்தில் மனித உடல்கள் புதைக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் போலீஸ் அதிகாரி ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷை கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர் தற்போது மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிரவும்...