Main Menu

மணமகள் போல பெண் குரலில் பேசி மாப்பிள்ளையிடம் ரூ.21 லட்சம் சுருட்டல்- மோசடி நபர் கைது

சென்னை புழுதிவாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ரகுராம் (வயது 39). பட்டதாரியான இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- எனது தந்தை எனக்கு பெண் பார்த்து வந்தார். இதுதொடர்பாக அவர் ஆன்லைன் வாயிலாக விளம்பரப்படுத்தி இருந்தார். இதை பார்த்து விட்டு, சேலத்தில் இருந்து கல்யாணராமன் என்பவர் எனது தந்தையிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி எனது புகைப்படம் மற்றும் என்னை பற்றிய இதர தகவல்களை கேட்டு பெற்றார். பின்னர் தனது அண்ணன் மகள் ஐஸ்வர்யாவிற்கு என்னை பிடித்து இருப்பதாகவும், திருமணம் செய்து கொடுக்க சம்மதம் என்றும் தகவல் அனுப்பினார் கல்யாணராமன். திருமண ஏற்பாடுகள் நடந்தது. மணப்பெண் என்று சொல்லப்பட்ட ஐஸ்வர்யா என்னுடன் அடிக்கடி செல்போனில் ஆசையாக பேசுவார். நானும் அவர் பேசியதை உண்மை என்று நம்பினேன். அவரது புகைப்படம் என்று அழகான பெண்ணின் புகைப்படமும் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த மே மாதம் ஐஸ்வர்யா தனது பேச்சின் நடுவில் சோகமாக பேசுவது போல பேசி, தனது தாயாருக்கு உடல்நிலை சரி இல்லை என்றார். ஆஸ்பத்திரியில் தனது தாயார் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பண உதவி வேண்டும், என்று கேட்டார். எனது வருங்கால மனைவி என்ற எண்ணத்தில் பண உதவி செய்து வந்தேன். கொஞ்சம், கொஞ்சமாக ரூ.21 லட்சம் வரை வாங்கி விட்டார். அதன்பிறகு ஐஸ்வர்யா என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். திடீரென்று கல்யாணராமன் பேச ஆரம்பித்தார். திருமணம் பற்றி கேட்டபோது, பல காரணங்களை சொல்லி தட்டி கழித்தார். ஐஸ்வர்யாவை பேசச்சொல்லுங்கள், என்று கேட்டால், ஐஸ்வர்யா இனி பேசமாட்டாள், நான் தான் பேசுவேன், என்றார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யாவுக்கு உங்களை பிடிக்கவில்லை என்று பெரிய குண்டை தூக்கி போட்டார். அதன்பிறகு கல்யாணராமன் ஒரு மோசடி பேர்வழி என்றும், எனக்கு தனது அண்ணன் மகளை திருமணம் செய்து தருவதாகவும், மணமகள் பெயர் ஐஸ்வர்யா என்றும் கபட நாடகமாடி, அவரே ஐஸ்வர்யா போல பெண் குரலில் பேசி, தாயாருக்கு உடல் நலமில்லை என்றும் பொய் சொல்லி, ரூ.21 லட்சம் சுருட்டியது, எனக்கு தெரியவந்தது. இதனால் ரூ.21 லட்சம் பணத்தை திருப்பி கேட்டேன். பணத்தை தரமுடியாது என்று என்னை மிரட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் என்னை மிரட்டி வருகிறார். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, எனக்கு ரூ.21 லட்சம் பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கல்யாணராமன் என்ற பெயரும் போலியானது என்பது தெரியவந்தது. மணமகள் போல பெண் குரலில் பேசி மோசடி செய்த நபரின் பெயர் தாத்தாதிரி (வயது 49) என்பதாகும். சேலம் சின்ன திருப்பதி என்ற ஊரைச்சேர்ந்தவர். பட்டதாரியான அவர் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்தார். அவரை நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். சென்னைக்கு அழைத்துவரப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ரகுராமிடம் மோசடி செய்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டதாகவும், தாத்தாதிரி கூறினார். அது உண்மையா, என்றும், இதுபோல பெண் குரலில் பேசி வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா, என்றும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பகிரவும்...