Main Menu

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

பேரிறிவாளனின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுப்பார் என மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசாரணையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிவுள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்திவைத்து, விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு வாதிட்டது.

எனினும், நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியதுடன் தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதேவேளை, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. எனினும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆளுநர் இந்தப் பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...