பெயிரூட் வெடிப்பு சம்பவம்: வீடுகளை இழந்து இரண்டு இலட்சம் மக்கள் தவிப்பு!
லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால், பல கட்டடங்கள் சேதமாகியுள்ள நிலையில், சுமார் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக பெயிரூட்டின் ஆளுநரான மர்வான் அபாத் தெரிவித்துள்ளார்.
200,000 முதல் 250,000பேர் வரை வீடுகளை இழந்துவிட்டதாகவும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் வழங்குவதில் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பெயிரூட் தீயணைப்பு படையின் 10 உறுப்பினர்களை நாங்கள் இழந்துள்ளோம். சேதங்கள் 3 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம்’ என கூறினார்.
மேலும், லெபனானின் தலைநகரில் வெடிக்கும் சாத்தியம் இருப்பதாக 2014ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அறிக்கை எச்சரித்ததாக ஆளுநர் தெரிவித்தார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி இரவு 08.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது. மேலும், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.