Main Menu

கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் – 65 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்கு மாகாணமான இத்தூரியில் (Ituri) எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (Africa CDC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எபோலா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 65 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, இத்தூரி மாகாணத்தில் உள்ள மொங்வாலு (Mongwalu) மற்றும் ரம்பாரா (Rwampara) ஆகிய பகுதிகளில் அதிகளவான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

தலைநகர் கின்ஷாசாவில் உள்ள தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (INRB) மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 20 மாதிரிகளில் 13 மாதிரிகளில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாணத் தலைநகரான புனியாவிலும் (Bunia) சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஆய்வக முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் எல்லையோரக் கண்காணிப்பு குறித்து ஆராய கொங்கோ, உகாண்டா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச பங்காளர்களை உள்ளடக்கிய அவசரக் கூட்டம் ஒன்றிற்கு Africa CDC அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் ஆபிரிக்க நாடுகளில் எபோலா வைரஸினால் சுமார் 50,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோவில் 2018 முதல் 2020 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான பரவலின் போது சுமார் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.