Main Menu

பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது – சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 08) ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, 

பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவு, திறன் மற்றும் தொழில் தன்மையுடன் கூடிய இலங்கைப் பெண்கள் இன்று இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தனித்துவமானப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இத்தகையப் பின்னணியில் குடும்பம் மட்டுமின்றி சமூகத்திலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்கள் நாட்டின் அபிமானத்திற்குரியவர்கள்.

நிலையான அபிவிருத்திக்கான பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த அரசாங்கம் தற்போது விரிவான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, டிஜிட்டல்  மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்காக பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மேலும், மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், பெண்கள் மீதான பாகுபாட்டைத் தவிர்க்க, முதல் முறையாக தேசிய ஆண் – பெண் பாலினக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.

தேசிய மகளிர் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான இரண்டு புதிய சட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயல் திட்டம் தற்போது இறுதிச் செய்யப்பட்டு அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அத்தோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தேவையான சட்ட திருத்தங்களையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒட்டுமொத்த பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதோடு, சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்றார். 

பகிரவும்...