Main Menu

புடின் மேலும் இரண்டுமுறை ஜனாதிபதியாகும் வாய்ப்பு- புதிய அரசியலமைப்பில் கையொப்பமிட்டார்!

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் இருமுறை போட்டியிடும் வகையில் திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தில் விளாடிமிர் புடின் கையொப்பமிட்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற சட்டவரைபை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வரைபின்படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும். அதாவது, ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம்.

சுருக்கமாகக் கூறவேண்டுமானால், தற்போது ஜனாதிபதியாக உள்ள புடின் அடுத்துவரும் 2024ஆம் ஆண்டு மற்றும் 2030ஆம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா தாக்கல் செய்த இந்த சட்டவரைபு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் சமீபத்தில் நிறைவேறியது. இந்த வரைபு ஜனாதிபதி புடினின் ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டது.

இந்தப் புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் நேற்று (சனிக்கிழமை) கையொப்பமிட்டுள்ளார். 68 பக்கங்களைக் கொண்ட இந்தப் புதிய சட்டத்தின் வரைபை ரஷ்ய ஜனாதிபதியின் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டம் ரஷ்யாவின் அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும். இதனை ஏற்றோ, அல்லது நிராகரித்தோ அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் தீர்மானிக்க வேண்டும். அதன்பின்னர் இந்தச் சட்டம் தொடர்பாக ஆதரித்தோ, எதிராகவோ அந்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (வயது 67),

ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் கே.ஜி.எஃப் எனப்படும் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையை தொடங்கிய புடின், 1999ஆம் ஆண்டு ஓகஸ்ற் 9ஆம் திகதி ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய ஜனாதிபதி எல்ட்சின், விளாடிமிர் புடினை பொறுப்பு பிரதமராக முதன்முறையாக நியமனம் செய்தார்.

அப்போது அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 300பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாகக் கருதப்பட்ட பகுதிகளில் வான்வழியாக சென்று குண்டுகள் வீசப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் புடின் ரஷ்ய மக்களிடையே புகழ்பெற்றார்.

இதையடுத்து, பல காரணங்களுக்காக ஜனாதிபதியாக இருந்த எல்ட்சின் தனது பொறுப்பை இராஜினாமா செய்து 1999ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி விளாடிமிர் புடினை ரஷ்யாவின் ஜனாதிபதியாக நியமனம் செய்தார்.

பின்னர், ரஷ்யாவின் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புடின் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார். இதனால் 2024 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவில் புடினின் ஆதிக்கம் இருக்கும். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், ரஷ்யாவில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாசன சட்டத்தின்படி தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழலில் புதிய சட்டவரைபால் புடினுக்கு மேலும் இரண்டு முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பகிரவும்...