Main Menu

பிலிப்பைன்ஸின் தால் எரிமலை குமுறல்: அப்பகுதியிலுள்ள 50,000 மக்கள் வெளியேற்றம்!

தென்கிழக்கு ஆசிய தேசத்தில் இரண்டாவது அதிக எரிமலை குமுறல்கள் ஏற்படும் பிலிப்பைன்ஸின் தால் (Taal) எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி அமைந்துள்ள 8 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டார்களா? என்று கண் காணிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகர் மணிலாவில் இருந்து தெற்கே 66 கி.மீ. தொலைவில் ஏரியின் நடுவே அமைந்துள்ள எரிமலையில், லார்வா குழம்புகள் வெளியேறியதால் அப்பகுதியிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் அரசாங்கம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில் குறித்த எரிமலை சில மணிநேரத்தில் அல்லது சில நாட்களில் வெடித்து சிதறலாம் என அரசாங்கம் எச்சரித்துள்ள நிலையில், அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கும், கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை சாம்பல் வீதிகளை மூடும் அபாயம் இருப்பதால், எரிமலையை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.

அத்தோடு, எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 286 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

1911ஆம் ஆண்டு தால் எரிமலை வெடித்து சிதறியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1977ஆம் ஆண்டு அந்த எரிமலை வெடித்தது. 43 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தால் எரிமலை வெடிக்கத் தொடங்கி இருக்கிறது.

பகிரவும்...