Main Menu

பிரியங்கர பெர்ணாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து இறுதி தீர்மானம்

பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவிற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது.

இதற்கமைய பெரும்பாலும் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வெளிவிவகார அமைச்சு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அத்தோடு, இராணுவத்துடனும் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வது குறித்து இந்த கலந்துரையாடல்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதற்கமைய பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் ஊடாக இந்த விடயம் சம்பந்தமாக தகவல்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தபோதும் இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து கருதி அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டார்

எனினும் அவருக்கு இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து இருப்பதில் சந்தேகம் எழுப்பப்பட்டு மீண்டும் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதன்படி அவரது சைகை, அச்சுறுத்தும் வகையிலானது என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 2400 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) அளவில் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...