பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொரிஸ் ஜோன்சனிற்கு எதிராக குற்றச்சாட்டு!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் G7 மாநாடு இன்றுடன்(திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது.
இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் சந்தித்து பேசியிருந்தனர்.
இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென பொரிஸ் ஜோன்சன் தனது கால்களை மேசையில் ஒரு நொடி வைத்துவிட்டு பின்னர் கீழே வைத்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
இந்தநிலையிலேயே பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டிருந்ததாக இணையவாசிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.