பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுகிறாரா?
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஊதியம் போதவில்லை என்று கூறி தனது பதவியை எதிர்வரும் வசந்த காலத்தில் இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெயரிடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோளிட்டு பிரித்தானிய டேப்ளாய்ட் தி டெய்லி மிரர் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தற்போது 150,402 பவுண்டுகள் ஊதியமாகப் பெற்று வருகிறார். இது அவரது முந்தைய வருவாயோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரிஸ் ஜோன்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டுகள் ஊதியமாக பெற்று வந்ததாக மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
பொரிஸ் ஜோன்சனுக்கு ஆறு குழந்தைகள், அவர்களில் சிலர் இளைஞர்களாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான செலவுகளை பொரிஸ் ஜோன்சன் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது, அவரது முன்னாள் மனைவி மரினா வீலருக்கு, விவாகரத்து நடைமுறைப்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
டோரி கட்சியின் தலைவராவதற்கு முன்பு வரை பொரிஸ், 275,000 பவுண்டுகளை ஆண்டு வருமானமாகப் பெற்று வந்ததாகவும், மாதத்துக்கு இரண்டு மேடைப்பேச்சுக்கு 160,000 பவுண்டுகளையும் வருவாயாக ஈட்டியதாகவும் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.