பாகிஸ்தானுடனான நட்பு வலுவானது: சீன ஜனாதிபதி
சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் மாறுதல் ஏற்பட்டாலும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நட்புறவு வலுவானதாக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜின்பிங் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார்.
இந்த பயணத்தில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும் ஜின்பிங் மற்றும் இம்ரான்கான் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் உள்ள நட்சத்திர விடுதியில் ஜின்பிங்கை இம்ரான்கான் நேற்று மீண்டும் சந்தித்தார்.
இதன்போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போதே சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நட்புறவு எப்போதும் உடைக்கமுடியாததாக இருக்கும் என இம்ரான்கானுக்கு ஜின்பிங் உறுதியளித்தார்.
மேலும் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு நீண்ட ஆயுளைக் கொண்டதென்றும் ஜின்பிங் இதன்போது தெரிவித்தார்.