பலவீனப் படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் புதுப்பிக்கப் பட வேண்டும் – கோத்தாபய
தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் பலவீனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீர்கொழும்பில் நேற்றிரவு இரவு இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழுக்களின் விசாரணைகளின் மீது மத தலைவர்களும், பொது மக்களும் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார்கள். எமது அரசாங்கத்தில் இத்தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்படும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் குறைப்பாடுகளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் தேவைகளை ஒருபோதும் முன்னிலைப்படுத்த முடியாது. எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தி அதைதொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் ஏப்ரல் 21 தின குண்டுத் தாக்குதல் சுயாதீன விசாரணைக்குள் உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.