Main Menu

பரபரப்பான போட்டியில் மே.தீவுகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி முன்னேறியுள்ளது.

ராய்பூர் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா ஜாம்பவான்கள் அணியும் மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான்கள் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான்கள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஜாம்பவான்கள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சச்சின் டெண்டுல்கர் 65 ஓட்டங்களையும் யுவராஜ் சிங் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பெஸ்ட் 2 விக்கெட்டுகளையும் அஸ்டின் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான்கள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியா ஜாம்பவான்கள் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டுவைன் ஸ்மித் 63 ஓட்டங்களையும் டியோ நரைன் 59 ஓட்டங்களையும் லாரா 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியா ஜாம்பவான்கள் அணியின் பந்துவீச்சில், வினய் குமார் 2 விக்கெட்டுகளையும் இர்பான் பதான், கோனி மற்றும் ஓஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 20 பந்துகளில் 6 சிக்ஸர் 1 பவுண்ரி அடங்களாக ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட யுவராஜ் சிங் தெரிவுசெய்யப்பட்டார்.

பகிரவும்...