Main Menu

நெருப்புடன் விளையாடும் அபாயகரமான கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்: பைடனுக்கு சீனா எச்சரிக்கை!

தாய்வானுக்கு ஆதரவு காட்டும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், ‘தாய்வான் பிரச்சினையில் சீன அரசாங்கம் சமரசம் அல்லது சலுகைகளுக்கு இடமளிக்காது. தாய்வான் பிரச்சினையின் ஆழத்தை முழுமையாக புரிந்துகொள்ள அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

நெருப்புடன் விளையாடும் முந்தைய நிர்வாகத்தின் அபாயகரமான கொள்கைகளை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்’ என கூறினார்.

சீனாவில் கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தீவு நாடாக உருவான தாய்வானை, சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி அந்நாட்டை கைப்பற்றுவோம் எனவும் சீனா கூறி வருகின்றது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தாய்வானுக்கு ஆதரவாக இருந்து வந்தது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தாய்வானுக்கு அமெரிக்கா இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்து வந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனும் அதே கொள்கையை கடைபிடித்து வருகிறார்.

பகிரவும்...