Main Menu

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் யார்- யாரை ஈடுபடுத்த வேண்டும்? ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் யார்- யார் என்பது பற்றிய பட்டியல் தயாராக உள்ளது.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6-ந் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அன்று இரவே அனைத்து மின்னணு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஓட்டு எண்ணும் மையங்கள் அனைத்திலும் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்டிராங் ரூம்’ முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் கண்காணித்து வருகிறார்கள். இதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 3-வதாக ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணும் மையங்களின் நுழைவு வாயிலில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்படி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கடந்த 24 நாட்களாக வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகலாக போலீசாரும், துணை ராணுவப்படையினரும் கண்காணித்து வரும் நிலையில் நாளை மறுநாள் (மே 2-ந் தேதி) 234 தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதனையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக காவல்துறையில் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். இவர்களில் 1 லட்சம் காவலர்கள் ஓட்டு எண்ணிக்கை அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு 24 மணிநேரமும் சுழலும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டு எண்ணிக்கை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அன்றைய தினம் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்களை தவிர மற்றவர்கள் வெளியில் வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்.

பகிரவும்...