Main Menu

நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் – சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சில வேளைகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் எமது அறிவிப்பினால் தோல்வியைத் தழுவலாம்.

அவ்வாறுதான் தென்னிலங்கையின் அரசியல் நிலை காணப்படுகின்றது. இந்த விடயத்தில் நாம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்” என கூறினார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் மூலமான வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தற்போது கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசியல் தொடர்பாக தமிழ் மக்கள் மிகுந்த அறிவும் அனுபவமும் உடையவர்கள். தமிழ் அரசியல்வாதிகளை விட, தமிழ் மக்களிடம் மிகத் தெளிவான அரசியல் சிந்தனை உண்டு என்றே கூறவேண்டும்.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற சரியான முடிவை, தமிழ் மக்கள் தாமாக சிந்தித்து சரியான முடிவை எடுப்பார்கள். அவ்வாறு அவர்கள் எடுக்கும் முடிவு ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் ஒரே முடிவாக அமையும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பகிரவும்...