Main Menu

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கையின் பழைமை வாய்ந்த முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதும், அலங்காரக் கந்தனாக வர்ணிக்கப்படுவதுமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆம் திருவிழா இன்றாகும்.

இன்றைய தீர்த்தத்திருவிழாவினை முன்னிட்டு காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து 8 மணியளவில் வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தீர்த்தத்திருவிழாவை முன்னிட்டு ஐந்து வாகங்களில் சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றது.

அதிகளவிலான பக்தர்கள் இன்று காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். தூக்குக்காவடிகள், நேற்றைய நாளைப் போல செட்டித்தெரு வரையே அனுமதிக்கப்பட்டிருந்தன.

தீர்த்தத்திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தின் பாதுகாப்பும் வழமைபோல் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பக்தர்கள் சோதனைகளின் பின்னரே ஆலய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வருடத்திற்கான நல்லூர் மகோற்சவம் இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பகிரவும்...