Main Menu

நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட கையாளுவதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மோர்னிங் கன்சல்ட்’ (morning consult),

இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ஜப்பான், பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜேர்மனி ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கையாளுகின்றனர், அவர்களுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி 83 சதவீத மக்கள் ஆதரவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், மெக்சிகோ அதிபர் 65 சதவீத ஆதரவுடன் 2-வது இடத்தையும், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 60 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வு முடிவுகளின் படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனுக்கு 9-வது இடமும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு 10-வது இடமும் கிடைத்துள்ளன.

இதேபோன்று இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து அண்மையில் நாடு முழுவதும் மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தியபோது பிரதமர் நரேந்திர மோடிக்கு 76.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

அதன்பின் மே 3-ம் திகதி வரை ஊரடங்கை நீட்டித்தபோது பிரதமர் மோடியின் மக்கள் ஆதரவு 93.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று குறித்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பகிரவும்...