Main Menu

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்- ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி: மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நீக்கப்படவுள்ளது.

இந்த பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர்,  தேவையற்ற பயணங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய, அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே பொதுமக்கள் செல்லவேண்டும் என அந்த நிலையத்தின் பிரதானி,  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது ஒருவர் மாத்திரமே வீடுகளிலிருந்து வெளியே செல்லவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியினுள் உணவுபொருள் விற்பனை நிலையம், மருந்தகம், எாிபொருள் நிரப்பு நிலையம் போன்ற அத்தியாவசிய விற்பனை நிலையங்கள் மாத்திரமே திறக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மே 29 மற்றும் 30ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு குறித்த முடிவு எட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பகிரவும்...