Main Menu

தேர்தல் பிரசாரத்தின் போது முககவசம் அவசியம் – வேட்பாளர்களுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிவதையும், தனி நபர் விலகலையும் பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு, தேர்தல் பிரசாரங்களின் போது முககவசம் அணிவது, தனி நபர் விலகலை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர், கூட்டம் கூட்டமாக சென்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் போது, கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா பரவலை தடுக்க முடியவில்லை என்பதால் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.

மாறாக, அரசியல் கட்சிகள், தொலைக்காட்சி, வாட்ஸ்- அப், பேஸ்புக், டுவிட்டர் மூலம் பிரசாரம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக கடந்த 2ந்தேதி, தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள், சமீபகாலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவது, 2-வது அலையாக இருக்கலாம். மேலும், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகள், ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் தலையிட முடியாது. பிரசாரங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர்.

பின்னர், பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிவதையும், தனி நபர் விலகலையும் பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

பகிரவும்...