Main Menu

தென்கொரியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

தலைநகர் சியோலில் நேற்று (புதன்கிழமை) கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் கிம் பூ கியூம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எதிர்வரும் ஜூன் மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்கள் பெரிதளவில் கூடவும், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

நாட்டில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி சென்றடையும் பட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும்’ என கூறினார்.

கொரோனாத் தொற்று பரவிய ஆரம்பத்தில் தொற்றை சிறப்பாக கையாண்ட நாடாக பாரட்டப்பட்ட தென்கொரியாவில், கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டாவது தொற்றலை ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து விரைந்து செயற்பட்ட தென்கொரியா, கடந்த பெப்ரவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கியது.

முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 65 முதல் 74 வயதுக்கு உட்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 5 கோடியே 20 லட்சம் பேரில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆனால், அங்கு இதுவரை 7.7 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பகிரவும்...