Main Menu

கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 8பேர் உயிரிழப்பு- பலர் காயம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கலிபோர்னியா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாண்டா கிளாரா கவுண்டி ஷெரிப் துறைக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள ஒரு முக்கிய போக்குவரத்து சேவையான பள்ளத்தாக்கு போக்குவரத்து ஆணையத்தால் (வி.டி.ஏ) இயக்கப்படும் சான் ஜோஸில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6.45 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

விடிஏ ஊழியர் என உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் நடத்தியவர், தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு எட்டு சக ஊழியர்களைக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சாண்டா கிளாரா கவுண்டி ஷெரிப் லொரி ஸ்மித் கூறுகையில், ‘எங்கள் அதிகாரிகள் கதவு வழியாக சென்றபோது, அவர் இன்னும் சுட்டுக் கொண்டிருந்தார். எங்கள் துணை அதிகாரி அவரைப் பார்த்தபோது, அவர் உயிரை மாய்த்துக் கொண்டார்’ என கூறினார்.

இந்த தாக்குதலுக்கு முன் குறித்த தாக்குதல்தாரி தனது வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடத்தில் அமெரிக்கா முழுவதும் இதுவரை 230 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...